ச்சீ இவனெல்லாம் என்ன மனுஷன்... சொத்திற்காக அம்மாவையே கொன்ற ஈன ஆசாமி!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் சொத்துக்காக தாயை மகனே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
வேலூர் :உலகத்தில் அன்னையின் அன்புக்கு ஈடாக எதுவும் இல்லை என்று சொல்லும் சமூகத்தில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் சொத்துக்காக தாயை மகனே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சுயநலமிக்க உலகில் தான் வாழ்ந்தால் மட்டும் போதும் என்று நினைக்கும் கொடூர எண்ணம் ஒரு மனிதனை எந்த ஈனச் செயலையும் செய்ய வைத்துவிடுகிறது என்பதற்கான அடையாளமாக தொக்கி இருக்கிறது இந்த கொலைச் சம்பவம்.
காட்பாடி அருகே ஈசன்ஓடை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது ராணியம்மாள். இவரை கடந்த 22ம் தேதியிலிருந்து காணவில்லை என்று அவரது குடும்பத்தார் புகார் அளித்திருந்தனர். ராணியம்மாளின் மகள் ஆனந்தி காட்பாட்டி காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார்.
மகன் மீது சந்தேகம்
காவல்துறையில் பணியாற்றிவரும் ஆனந்தி தனது தாயை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. ஆனால், ராணியம்மாளை தேடிவந்த காட்பாடி போலீசார், ராணியம்மாளின் மகன் ஆறுமுகத்தின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.
திட்டமிட்டு கொலை
சொத்திற்காக ராணியம்மாளின் மகன் ஆறுமுகம் தனது மனைவியுடன் சேர்ந்து பெற்ற தாயையே தலையணையால் அழுத்தி கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராணியம்மாளை கொன்றதோடு யாருக்கும் தெரியாமல் அவரை புதைத்தும் உள்ளனர் ஆறுமுகம் தம்பதி.
குற்றஉணர்வு இல்லை
ஆறுமுகம், பிரியா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சடலத்தை தோண்டி எடுத்து, வட்டாட்சியர் ஜெகன் முன்பு மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். ஆனால் தனது தாயின் உடலின் மிச்சத்தை தோண்டி எடுத்தபோது ஆறுமுகம் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் குற்றஉணர்வும் இல்லாமல் நின்றிருந்ததை பார்த்து அந்த கிராம மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
தந்தையையும் கொன்றவர்
குற்றத்தை இருவரும் ஒப்புகொண்ட நிலையில் ஆறுமுகம், அவரது மனைவி பிரியா ஆகியோர் சிறையில் அடைத்துள்ளனர். ஆறுமுகம் தனது தாயை மட்டும் கொள்ளவில்லை, கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தந்தை வேலாயுதத்தையும் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில்
ஜாமினில் வெளிவந்து தற்போது தனது தாயை கொலை செய்துள்ளார்.
பேராசை
கருவில் சுமந்த தாயையும், கண்ணாக வளர்த்த தந்தையையும் ஆறுமுகம் கொல்லக் காரணம் என்ன தெரியுமா? ஒன்றே ஒன்று தான் அது சொத்து. தாய், தந்தை வேண்டாம் அவர்களின் சொத்து முழுவதும் தனக்கே வரவேண்டும், எக்காரணம் கொண்டும் இரண்டு சகோதரிகளுக்குப் போய்விடக் கூடாது என்று பேராசைப்பட்டு எதற்கும் துணிந்த ஆறுமுகம் இந்த படுபாதகத்தை செய்துள்ளார்.
பாசம் செத்தொழிந்து விட்டது
அன்பு, பாசம், உணர்வு இதற்கு மூலக்காரணமானவர்கள் என்றால் அது தமிழர்கள் தான் என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்ன காலம் எல்லாம் எப்போதே செத்தொழிந்து போய்விட்டது என்பதை விளக்குகிறது வேலூரில் நடைபெற்றுள்ள கொடூர சம்பவம்.