தீவிரமடைகிறது தென் மேற்குப் பருவ மழை.. கன்னியாகுமரியில் விடிய விடிய கன மழை
நாகர்கோவில்: கேரளாவிலும், கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் தென் மேற்குப் பருவ மழை தீவிரமைடைந்துள்ளது. இதனால் கன்னியாகுமரி, தேனி, நெல்லை மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது.
கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மாவட்டம் முழுவதும் கன மழை கொட்டித் தீர்த்தது. காலையிலும் மழை நிற்கவில்லை. இதுவரை அங்கு 144 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
நாகர்கோவிலில் நேற்று இரவு முதலே மழை விட்டு விட்டு பெய்தது. இன்று காலையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, கோட்டார், வடசேரி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி சென்ற மாணவ- மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.
இதேபோல குளச்சல், கோழிப்போர்விளை, புத்தன் அணை, முள்ளங்கினாவிளை, பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், கொட்டாரம், மயிலாடி பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக வள்ளியாறு, பரளியாறு, குழித்துறையாறு, சுசீந்திரம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கனமழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயருகிறது.
குலசேகரம் அருகே அரசமூட்டில் பலத்த சூறாவளிக் காற்றிற்கு சுமார் 100 ஆண்டு பழமையான பெரிய மாமரம் வேரோடு நடுரோட்டில் சாய்ந்தது. இதனால் அங்கு உள்ள ஓர்க்ஷாப்பில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், 2 மினி லாரிகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அரசமூடு-மங்களம் சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சேர்வலாறு அணையில் 84.84 அடி தண்ணீர் இருந்தது. தொடர்மழை காரணமாக ஒரே நாளில் 19 அடி உயர்ந்து இன்று காலை 103.80 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது.
இதேபோல் பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 67.90 அடியாக இருந்தது. அங்கு ஒரே நாளில் 8 அடி உயர்ந்து இன்று 76.10 அடியாக உள்ளது. 6248 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையில் நேற்றைய நிலவரப்படி 73.20 அடியாக இருந்தது. இன்று காலை 73.10 அடியாக உள்ளது. அணைக்கு 1073 கனஅடி தண்ணீர் வருகிறது.
முல்லைப் பெரியாறு
அதேபோல தேனி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோல முல்லைப் பெரியாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 110.80 அடியாக உள்ளது. நீர்வரத்து 443 கன அடி. திறப்பு 75 கன அடி. இருப்பு 1038 மி.கன அடி. வைகை அணை நீர்மட்டம் 29.86 அடியாக உள்ளது.