சட்டப்பேரவை: தி.மு.க.வினரை பங்கேற்க அனுமதிக்கக்கோரிய மனு நிராகரிப்பு
சென்னை: சட்டப்பேரவை தொடர் முழுக்க திமுக எம்எல்ஏக்களை நீக்கம் செய்து உத்தரவிட்ட சபாநாயகர் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து கோரிக்கை விடுத்தன. ஆனால், எதிர்கட்சிகளின் வேண்டுகோளை சபாநாயகர் நிராகரித்து விட்டார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் 3 அறிக்கைகளை வாசித்தார். இதைத்தொடர்ந்து, தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய 6 கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து நின்று, ‘திமுக உறுப்பினர்கள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க கூடாது என்ற பேரவைத் தலைவர் அளித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்‘ என வலியுறுத்தினர்.
அப்போது அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து பேசும் போது, ‘‘தி.மு.க.வினர் மீது எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.
ஓ. பன்னீர் செல்வம் விளக்கம்
சபாநாயகரை கண்ணியக் குறைவான வார்த்தையை அவர்கள் பேசியது மட்டுமின்றி சபைக்கு இடையூறு செய்யும் நோக்கில் அவர்கள் தொடர்ந்து நடந்து வந்ததாகவும் கூறினார்.
பலமுறை சபாநாயகர் எச்சரித்தும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அரசியல் விளம்பரத்துக்காக அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
கண்டிக்கத்தக்க செயல்
மேலும் முதல்வரின் எண்ணப்படிதான் தாங்கள் வெளியேற்றப்பட்டதாக அவர்கள் கூறியது உள்ள படியே கண்டிக்கத்தக்க செயல்.
பொறுமை காத்த சபாநாயகர்
சபாநாயகர் எவ்வளவோ பொறுமை காத்தும் பலமுறை எச்சரித்தும் அவர்கள் சபையை கன்னியமாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்க வில்லை. அன்றைய தினம் உறுப்பினர் துரைமுருகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் அவர்களது உறுப்பினர்களை உட்காருங்கள் என்று கூறியும் உட்காரவில்லை.
அரசியல் லாபம்
உட்காருங்கள் வாய்ப்பு தருகிறோம். நாங்கள் பேச வாய்ப்பு தருகிறோம் என்று கூறியும் அவர்கள் கேட்கவில்லை. மலிவான அரசியல் லாபம் தேடுவதற்காக அவர்கள் நடந்து கொள்வதற்கு நீங்கள் துணை போவது (எதிர்கட்சி) எந்த வகையில் நியாயம்.
அன்பழகன் கருத்து
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது (2006-2007) எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா சபை விவாதத்தில் பங்கேற்று பேசும் போது அனைத்து அமைச்சர்களும் எழுந்து 62 தடவை குறுக்கீடு செய்தனர். பேச விடாமல் தடுத்தனர். ஆனாலும் தனது ஆணித்தரமான வாதத்தை அம்மா பேசிவிட்டு சென்றார். அப்போது நிதி அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன் கூறும் போது, ‘‘நிற்க வேண்டியவர் ஓடி விட்டார். ஓடிப்போனால் சொல்லக்கூடாதா?'' என்றார்.
வெளியேற்றும் சூழல்
இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது, அன்பழகன் சொன்ன வார்த்தை என்னவென்றால் நான் சொல்லியதில் தப்பு இல்லையே என்றார். எனவே தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சபையில் கண்ணியக் குறைவாக நடந்ததால்தான் 4-வது முறையாக வெளியேற்றும் சூழ்நிலையை உருவாக்கினார்கள். இவர்களுக்காக எதிர்க்கட்சியினர் பரிந்துரை செய்வது வருத்தமான செயல் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.
திமுகவினர் குழப்பம்
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் தனபால், கடந்த 22.7.2014 அன்று தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் நடந்த விதத்தை நீங்கள் எல்லோரும் எதிரே பார்த்து கொண்டு இருந்தீர்கள். இவர்கள் தினமும் திட்டமிட்டு குழப்பம் விளைவித்து வந்தனர். நானும் பொறுமை காத்து வந்தேன். அவர்கள் தினமும் அவைக்கு வந்து தங்கள் தொகுதி மக்களுக்கு தேவையான கோரிக்கையை வைக்காவிட்டாலும் மாண்புமிகு முதல்வரை பொருத்தமட்டில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளையும் தனது தொகுதிகளாக கருதி தேவையானவற்றை செய்து தரும் நீதி தேவதையாக விளங்கி கொண்டு இருக்கிறார்.
வார்த்தைக்கு மதிப்பில்லை
முதல்வரின் எண்ணத்துக்கு ஊறு ஏற்படக்கூடாது என்ற வகையில் அன்றைய தினம் எவ்வளவு நேரம் பொறுமை காக்க முடியுமோ அவ்வளவு நேரம் பொறுமை காத்து அவர்களை பலமுறை எச்சரிக்கை செய்தும் குந்தகம் விளைவித்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பலமுறை சொன்னோம். ஆனாலும் அவை மரபுக்கு கட்டுப்படாமல் பேரவை தலைவரின் வார்த்தைக்கு மதிப்பளிக்காதது ஏன்?
ஏன் வெளியேற்றினோம்?
தி.மு.க. சட்டமன்ற குழு தலைவர், துணைத் தலைவர் அமரச் சொல்லியும் அதற்கும் தி.மு.க. உறுப்பினர்கள் கட்டுப்படாமல் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துக்கு செயல்பட்டதால் தான் அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்.
திருந்துவதற்கு வாய்ப்பு
அவையில் இருந்து 2-வது முறை வெளியேற்றப்பட்ட உடனேயே இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டு இருக்கலாம். ஆனாலும் அவர்கள் திருந்துவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கலாம் என்ற எண்ணத்தோடு அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள தொடர்ந்து அனுமதித்தேன்.
எச்சரிக்கை தொனியில்
அதன் பிறகும் சபையில் 2 முறை வெளியேற்றப்பட்டு விட்டனர். எனது இருக்கைக்கு அருகில் வந்து கை நீட்டி குரல் எழுப்புவது என்பதை ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில் என்னையும் மதிக்காமல் அவர்களுடைய கட்சி தலைமைக்கும் கட்டுப்படாத காரணத்தால் நான் தி.மு.க. உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.
அனுமதி மறுப்பு
தி.மு.க. உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்ய வேண்டும் என்று மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்த தொடங்கினார்கள். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்தார்.
எதிர்கட்சியினர் வெளிநடப்பு
இதை தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹீருல்லா ஆகியோர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
திமுக எம்.எல்.ஏக்கள் பெயர் நீக்கம்
இந்நிலையில், சட்டப்பேரவைக்கு வரத் தடை விதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்களின் இருக்கைகளில் இருந்த காகிதத்திலான பெயர் சீட்டு நீக்கப்பட்டுள்ளது. பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் அமரும் இருக்கைகளில் ஒவ்வொருவரின் பெயரும் காகிதத்தில் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். இந்த காகிதத்தாலான பெயர்ச் சீட்டு திமுக எம்.எல்.ஏ.க்கள் அமரும் இருக்கைகளில் இருந்து வெள்ளிக் கிழமை நீக்கப்பட்டன.