பணமோசடி வழக்கு: வேந்தர் மூவிஸ் மதன் வாக்குமூலம்... பச்சமுத்து ஆஜர்
மதன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு ஆஜராகியுள்ளார்.
சென்னை: மருத்துவ சீட்டு மோசடி வழக்கு விசாரணைக்காக பச்சமுத்து ஆஜராகியுள்ளார். மதன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பச்சமுத்துவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன் கடந்த மே மாதம் 29ம் தேதி தலைமறைவானார். மருத்துவக் கல்லூரிகளில் சீட் வாங்கித் தருவதாக கூறி மதன் மீது 123 பேர் புகார்கள் பதிவாகின. மொத்தம் ரூ.84 கோடியே 27 லட்சம் மோசடி செய்திருப்பதாக புகார் கூறப்பட்டது.
இந்நிலையில் தலைமறைவான மதனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மோசடி புகார்கள் ஒருபக்கம் குவிய, ஆட்கொணர்வு மனுவால் நீதிமன்றம் நெருக்கடி கொடுக்க, தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருப்பூரில், அவரது பெண் தோழி வர்ஷா வீட்டில் ரகசிய அறையில் பதுங்கியிருந்த மதனை கடந்த 21ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட மதனிடம் 7 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த சைதாப்பேட்டை 11-வது நீதி மன்றம் கடந்த 23ம் தேதி அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து மதனை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதன் மீதான மோசடி புகார்கள், மோசடி பணத்தில் வாங்கிய சொத்துகள் குறித்த தகவல்கள், இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, தலைமறைவாக இருந்தபோது எங்கெல்லாம் சென்றார் போன்ற தகவல்களை பெறுவதற்காக போலீஸ் காவலில் விசாரணை நடந்து வருகிறது.
போலீசாரிடம் மதன் அளித் துள்ள வாக்குமூலத்தில், மாணவர்களிடம் வசூலித்த பணத்தின் பெரும் பகுதியை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
எனவே இது குறித்து விசாரணை நடத்துவதற்காக எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்துவின் மகன்களான ரவி பச்சமுத்து, சத்தியநாராயணா, எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பதிவாளர் சேதுராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கு மாறு மத்திய குற்றப்பிரிவு போலீ ஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்று காலையில் ரவி பச்சமுத்து மற்றும் சத்தியநாராயணா ஆகியோரின் வழக்கறிஞர்கள், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பதிவாளர் சேதுராமன் ஆகியோர் எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
மதனிடம் பணம் வாங்கிய மேலும் பலரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்து ஆஜரானார். மதன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பச்சமுத்துவிடம் விசாரணை நடைபெற்றது.