காவிரிக்கான போராட்ட களத்தில் புதுமண ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த ஸ்டாலின்
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைதாகி சிறை வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்தில் மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சாலை மறியல் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட நிலையிலும் திருமண மண்டபத்தில் புது மண ஜோடிகளுக்கு இன்று திருமணம் செய்து வைத்தார் மு.க. ஸ்டாலின்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஸ்டாலின் தலைமையில் எதிர்கட்சியினர் அண்ணாசாலையில் இருந்து ஊர்வலமாக சென்று மறியல் போராட்டம் செய்தனர். திடீரென பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலினை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்திய காவல்துறையினர் அவரை கைது செய்தனர். புரசைவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார் ஸ்டாலின். அவருடன் கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோரும் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
பரபரப்பான இந்த சூழ்நிலையில் ஸ்டாலின் தலைமையில் இளம்பெண்ணும் இளைஞரும் இன்று திருமணம் செய்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் ஆயினம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் பார்வதி ஆகியோரின் மகன் க. பாரதிதாசன்,ஸ்ரீதர் காந்திமதி ஆகியோரின் மகள் ஸ்ரீமதிக்கும் இன்று விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலையில் திருமணம் நடைபெற இருந்தது அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து கைதான தலைவர்களும், தொண்டர்களும் இருந்த மண்டபத்திலேயே மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. திருநாவுக்கரசர், திருமாவளவன், கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் புதுமண தம்பதியினர் மாலை மாற்றிக்கொண்டனர்.