தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஹைகோர்ட் தலைமை நீதிபதியை சந்திக்கிறார் ஸ்டாலின்
தூத்துக்குடி படுகொலை தொடர்பாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை சந்திக்க உள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடி படுகொலை தொடர்பாக விவாதிக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை சந்திக்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்க உள்ளார்.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடி தனமாக தாக்குதல் காரணமாக இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 25க்கும் அதிகமானோர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
நேற்று இந்த துப்பாக்கி சூடு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். அவர்களிடம் ஆறுதலாக பேசி உள்ளார். 144 தடை உத்தரவை மீறி ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார் என்று அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி படுகொலை தொடர்பாக விவாதிக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை சந்திக்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்க உள்ளார்.
தூத்துக்குடியில் அரசு செய்த கொடூரமான துப்பாக்கி சூடு குறித்து ஸ்டாலின், நீதிபதியிடம் விளக்கமாக எடுத்துரைப்பார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்டாலின் சிறிய அறிக்கை ஒன்றை அளிக்கவும் வாய்ப்புள்ளது.