சட்டசபை வீடியோவை சபாநாயகரும், செயலரும் திருத்த முயற்சிப்பதாக ஸ்டாலின் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது எனக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சியினர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரியதால் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில் "தமிழக சட்டசபையில் கடந்த 18-ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது, சட்டவிரோதமாகச் செயல்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டதாகவும், அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் விடுதியில் அடைத்துவைக்கப்பட்டு, சிறைக் கைதிகளைப் போல சட்டசபைக்கு அழைத்துவரப்பட்டதாகவும், மனசாட்சிப்படி எந்த எம்.எல்.ஏ.வும் வாக்களிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என்று திட்டமிட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சபாநாயகர் தன்னிச்சையுடன் செயல்பட்டுள்ளார். இது ஜனநாயகத்துக்கு எதிரானது.
எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு வெற்றிப்பெற்றதாக சபாநாயகர் அறிவித்த முடிவிற்கு தடை விதிக்கவேண்டும். இந்த முடிவினை செல்லாது என்று அறிவித்து ரத்து செய்யவேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபையில் நடந்த நிகழ்வுகளின் வீடியோ பதிவை தாக்கல் செய்ய சட்டசபை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். அதுமட்டுமின்றி எந்தவொரு உறுப்பினர்களையும் வெளியேற்றாமல் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தவும், இந்த வாக்கெடுப்பை தமிழக கவர்னரின் செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைத்து, அவர்களது மேற்பார்வையில் நடத்தவேண்டும் என உத்தரவிடவேண்டும்." இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு சென்னை ஹைகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பதிவான வீடியோவை சட்டசபை செயலரும் சபாநாயகரும் திருத்த முயற்சி செய்வதாக ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தனர். இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று ஸ்டாலினின் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இன்று வேறு அலுவல்கள் இருப்பதாக கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.