சட்டமன்றத்தில் எதிர்கட்சியினரை ஜெ.பேசவிடுவதில்லை ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் எதிர்கட்சியினருக்கு சட்டமன்றத்தில் பேச வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மு.க. ஸ்டாலின் இன்று தனது கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
முதன் முதலில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி என்பது 1996 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள்,முதல்வராய் இருந்த போது அறிவிக்கப்பட்டது.
அப்படி ஒதுக்கப்படும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதிலிருந்து தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் தான் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் தேவைக்கான உபகரணங்கள்,வாகனங்கள் தருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
அதற்கேற்ப எனது கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் வீதம் இந்த மூன்று ஆண்டுகளில் பதினைந்து இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு,அதில் முதற்கட்டமாய் இன்று நான்கு மாற்றுத் திறனாளிகளுக்குதலா ரூபாய் 53 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியான ஆறு கோடி ரூபாயை நான் முறையாக என்னென்ன பணிகள் ஆற்றிட வேண்டுமோ அந்தந்தப் பணிகளுக்கானத் திட்டகளுக்கு ஒப்புதல் கடிதங்களை ஐந்து கோடியே அறுபத்தி நான்கு இலட்சம் ரூபாய்க்கு நான் வழங்கியிருக்கிறேன். அப்படி வழங்கப்பட்ட ஐந்து கோடியே அறுபத்தி நான்கு இலட்சம் ரூபாயிலே பதினெட்டு இலட்சம்தான் (அரசுத் தரப்பினால்) செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை மிக வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்.
அந்த பதினாறு லட்சமும் எதற்கு செலவு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் 66வது வார்டு கிருஷ்ணா நகரிலே சாலை போடுவதற்காக பயன்ப்படுத்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி கட்டிடங்கள் கட்ட பழுது பார்க்க சமுதாய நலக்கூடங்களை கட்ட,பள்ளி கூடங்கள் கட்ட-சரிபார்க்க பேருந்து நிழற்கூடங்கள் கட்ட,அந்த ஐந்து கோடியே அறுபத்தி நான்கு இலட்சம் ரூபாய் குறித்து சம்மந்தப்பட்டதுறையின் அதிகாரிகளுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதினாலும் எஸ்டிமேட் போடப் படுகிறது, ஆய்வில் இருக்கிறது என தொடர்ந்து மூன்று ஆண்டு காலம் பதில் வந்து கொண்டிருக்கிறதே தவிர வேறு எந்த தகவலும் இல்லை எனவே இது குறித்து சட்ட வல்லுநருடன் கலந்து பேசி நீதிமன்றத்திற்குச் செல்லலாம் என இருக்கிறேன் என்றார்.
தொகுதி மேம்பாடு பற்றி முதல்வரை பல சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திக்கிற நிலையில் நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், இது குறித்து சட்டமன்றத்திலே பேசலாம் என சொன்னால் சட்டமன்றம் கூடுவதோ இரண்டு மூன்று நாட்கள் தான்.அப்படி கூடினாலும் எதிர்க்கட்சியாக உள்ள எங்களைப் போன்றோரை பேச விடுவதும் இல்லை, மீறி பேசினாலும் தூக்கி வெளியிலே போட்டு விடுகிறார்கள். இது தான் ஜெயலலிதாவின் அக்கிரம ஆட்சி என்றார்.