போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்.. எடப்பாடியாருக்கு போன் போட்டு பேசிய ஸ்டாலின்
முதலமைச்சர் பழனிச்சாமியுடன் தொலைபேசியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனையில் சமூக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனையில் அரசு சமூகமான முடிவை எடுக்கவேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பல இடங்களில் கலாட்டாக்களும், வன்முறைகளும் நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த போக்குவரத்து ஊழியர்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வருடன் இவ்விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் பேசியுள்ளார்.
காலை 11 மணியளவில் தொலைபேசியில் பேசிய அவர், போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனையில் சமூக தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இருவரும் இந்த போரட்டம் தொடர்பாக 10 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது.
ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் எதிரிகளாக நடந்துக்கொள்வது தான் தமிழக அரசியலில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுவது வழக்கம். ஆளுங்கட்சி வேண்டும் என்றால், எதிர்க்கட்சி வேண்டாம் என்பார்கள், இதே போல வேண்டாம் என்றால் வேண்டும் என்பார்கள்.
இந்நிலையில் மக்கள் பிரச்சனைக்காக முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவரே நேரில் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசுவது பல தசாண்டுகளுக்கு பின் நடக்கும் ஒரு சம்பவமாக கருதப்படுகிறது. இதே நாகரீகமான அரசியல் தொடர்ந்தால், தமிழகத்திற்கு விடிவு காலம் தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.