தமிழகத்தில் அசாதாரண சூழல்... சட்டமன்றத்தை கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்!
பேருந்து கட்டண உயர்வால் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
சென்னை : அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வால் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்தேன். பேருந்து கட்டண உயர்வால் தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை விவாதிக்கும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உடனடியாக சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தமிழகத்தின் ஆளுநரே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்த நிற்கிறார், புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கிற போது விஜயேந்திரர் எழுந்து நிற்காததற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கிறேன். ஆளுநரே எழுந்து நிற்கும் போது தமிழ்த்தாயை அவர் அவமதித்திருப்பது கண்டனத்திற்குரியது.
தியானம் எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம், தேசிய கீதம் இசைக்கும் போது ஏன் தியானம் இருக்கவில்லை. தவறு நடந்திருக்கிறது அதில் இருந்து தப்பிப்பதற்காக இப்படிப்பட்ட தந்திரங்கள் பரப்பப்படுவதாகத் தான் நான் பார்க்கிறேன் என்றும் ஸ்டாலின் கூறினார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து ஏற்கனவே சட்டசபையில் மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். முடிந்தவரை மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என்று சட்டசபையில் பேசி இருக்கிறேன் அதையேத் தான் இப்போதும் வலியுறுத்துகிறேன்.
குட்காவில் ஊழல், நிலக்கரி ஊழல் என எல்லாவற்றிலும் ஊழல். குட்கா ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இதே போன்று நிலக்கரி ஊழல் விவகாரத்தில் தேவைப்பட்டால் நீதிதமன்றத்தை நாடி இதற்கும் சிபிஐ விசாரணை கோருவோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.