ஜனாதிபதி தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சி தானாய் கவிழும்.. விரைவில் தேர்தல் வரும்.. பிரேமலதா உறுதி
ஜனாதிபதி தேர்தலுக்கு பின் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேம லதா உறுதிபடக் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் தானாய் ஆட்சி கவிழ்ந்து, ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் சட்டசபை தேர்தல் நடக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டோம். மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் தோற்றுப் போனோம்.

தோல்வி சகஜம்
ஆனால், இந்த தோல்வி என்பது மிகவும் தற்காலிகமானது. அதே போன்று தேர்தலில் தோல்வி அடைவது என்பது சகஜமானது. அடுத்து வரும் தேர்தலில் தேமுதிக வெற்றி வெற்று ஆட்சி அமைக்கும்.

முதல் இடத்தில் தேமுதிக
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக திமுகவிற்கு மாற்றாக தேமுதிகதான் இருக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அடுத்தடுத்து தேமுதிக முதல் இடத்தில் வரக்கூடிய ஒரு கட்சி .

மோடி ஆட்சி
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை மோடி எந்த சாதனையையும் இந்தியாவில் நிகழ்த்தவில்லை.

சுற்றுப்பயணத்தால் பலன் என்ன?
இந்த 3 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கு அதிகம் பயணித்தவர் மோடி. அதனால் இந்தியாவிற்கு என்ன பயன்? என்ன புதிய தொழில் திட்டங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன?. புதிய வேலைவாய்ப்புகள் என்ன உருவாக்கப்பட்டுள்ளன?

விரைவில் சட்டசபை தேர்தல்
முதல்வர் பழனிச்சாமி ஆட்சியில் தமிழகத்தில் சாதனை என்று எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. அதற்கு பதிலாக நாள்தோறும் தமிழகத்தில் கேலிக்கூத்துதான் நடக்கிறது. அதிமுக ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டியதில்லை. அது தானாக கவிழும். ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன் சட்டசபை தேர்தல் வரும் என்று பிரேமலதா கூறினார்.












Click it and Unblock the Notifications