உள்ளாட்சி தேர்தலில் ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட முடியும் - மாநில தேர்தல் ஆணையம்
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் வெவ்வேறு பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்திருந்தால், ஒரு பதவி தவிர மற்றவற்றுக்கான மனுக்களைத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் குலுக்கல் முறையில் ஒரு பதவி தேர்வு செய்யப்பட்டு மற்றவை நிராகரிக்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்து நடத்த வேண்டும் என்றும், 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் திமுக மற்றும் பாமக சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.
இந்த வழக்கு கடந்த 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் பதிலளிக்க கால அவகாசம் வழங்கி விசாரணையை செப்டம்பர்8ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததது. இதையடுத்து, இந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில், வரும் அக்டோபர் 24ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கத் திட்டுமிட்டுள்ளோம். மேலும் செப்டம்பர் 3வது வாரத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
அதேபோல், உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி வரையறையை உடனடியாக அமல்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே உள்ளாட்சி தேர்தலில், ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட முடியும்' என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தில் கடந்த 2011ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், அதே ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேர்வான வர்களுக்கான பதவிக்காலம் வரும் அக்டோபர் 24ம் தேதியுடன் முடி கிறது. இதையடுத்து, அக்டோபர் மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல்
தொடர்ந்து, தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மாநில தேர்தல் ஆணையம், செப்டம்பர் 1ம் தேதி வரையிலான வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் துறையிடமிருந்து பெற்றுள்ளது. இதில் தற்போதைய நிலவரப்படி, 5 கோடியே 81 லட்சத்து 40 ஆயிரத்து 954 வாக்காளர்கள் உள்ளனர்.
எத்தனை பதவிகள்
தற்போதைய தேர்தலைப் பொறுத்த வரை, மாநகராட்சி, நகராட்சி சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், 12 மாநகராட்சி மேயர்கள், 148 நகராட்சிகளின் தலைவர்கள், 561 பேரூராட்சிகளின் தலைவர்களை வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களே தேர்வு செய்ய முடியும். நேரடி தேர்தல் முறை கிடையாது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் தலைவர்கள் மட்டுமே நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முன், தேர்தல் தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள், நடைமுறைகளைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான கையேட்டையும் வெளியிட்டுள்ளது. இதில், வேட்பாளர்களுக்கான தகுதி, கட்டுப்பாடுகள், மனுத்தாக்கல் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
21 வயது முடிந்த வேட்பாளர்
அதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அந்த தேர்தலுக்கு தொடர்புடைய ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். பெயர் இடம் பெற்றுள்ள வார்டு தொடர்புடைய தேர்தலில் மட்டுமே அவர் வாக்களிக்க தகுதியுடையவராவார். வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று வேட்பாளர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
யாருக்குத் தகுதி?
உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த பணியாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராமப் பணியாளர், மத்திய, மாநில அரசு அலுவலராகவோ, பணியாளராகவோ இருந்தால் போட்டியிட அனுமதியில்லை. மத்திய அல்லது மாநில அரசில் பதவி வகித்து, லஞ்சம் அல்லது அரசுக்குத் துரோகம் இழைத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால், அபராதம் விதிக்கப்பட்ட நாள் அல்லது சிறையில் இருந்து வெளியில் வந்த நாளில் இருந்து 6 ஆண்டுகளுக்குப் போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.
போட்டியிட தடை
வேட்பாளர் மனநலம் குன்றியவராக இருக்கக் கூடாது. போட்டியிட விரும்பும் ஊராட்சி மற்றும் எந்த ஊராட்சியிலும் வேலைக்கான, பொருள் வழங்குவதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக் கூடாது. முந்தைய ஆண்டு வரை ஊராட்சிக்கு அளிக்க வேண்டிய எந்த நிலுவைத் தொகையும் வைத்திருக்கக்கூடாது. தேர்தல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது என தகுதிகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பதவியிடங்களில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு ஒரு பதவி
வெவ்வேறு பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்திருந்தால், ஒரு பதவி தவிர மற்றவற்றுக்கான மனுக்களைத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் குலுக்கல் முறையில் ஒரு பதவி தேர்வு செய்யப்பட்டு மற்றவை நிராகரிக்கப் படும். வேட்பாளர் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சியை சார்ந்தவராகவோ, சுயேச்சையாகவோ இருந்தால், தேர்தலுக்காக அறிவிக்கப் பட்டவற்றில் 3 சின்னங்களை விருப் பத்துக் கேற்ப வரிசைப்படுத்தி கேட்கலாம்.
வைப்புத்தொகை
வைப்புத் தொகையை பொறுத்தவரை ஒரு பதவிக்கு எத்தனை மனுக்கள் தாக்கல் செய்தாலும் ஒரே ஒருமுறை மட்டும் வைப்புத் தொகை செலுத்தினால் போதுமானது. இவை தவிர, வேட்பு மனுக்கள் பரிசீலனை, நிராகரித்தல், மனுக்களை திரும்பப் பெறுதல், சின்னங்கள் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் இந்தக் கையேட்டில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், ஊராட்சிகள் தேர்தல் குறித்த சட்டங்கள், விதிமுறைகள், செயல்கள், நடைமுறைகள் மற்றும் அறிவுரைகளைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் எனவும் கையேட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது
விரைவில் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலுக்கு ஏற்கெனவே மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுவிட்டனர். தேர்தல் வாக்குப்பதிவு மையங்கள், வாக்குப்பதிவு அமைவிடங்கள் போன்றவை தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டு, அது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநில தேர்தல் ஆணையர் பெ.சீதாரா மன் மாவட்டங்களில் தேர்தல் முன்னேற் பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தி முடித்துள்ளார். எனவே, விரைவில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.