மக்களுக்கு 'ஷாக்' அடிக்கும் செய்தி.... தமிழகத்தில் மின் கட்டணம் 15 % உயர்வு!
சென்னை: தமிழகத்தில் அனைத்து நுகர்வோருக்குமான மின் கட்டணம் இன்று முதல் 15 சதவீதம் உயர்த்தப் படுவதாக தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
சென்னை, நெல்லை, ஈரோட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்துவது குறித்து மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெற்றது. மின்சார ஒழுங்கு முறை ஆலோசனைக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 12ஆம் தேதி முதல் மின்சார கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
இதன் அடிப்படையில் மின் நுகர்வோருக்கு 15 சதவிகிதம் மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட மின் கட்டண விபரம்
முதல் 100 யூனிட் வரையிலான மின் கட்டண உயர்வு ரூ.2.60ல் இருந்து ரூ.3ஆக உயர்ந்துள்ளது.
100 யூனிட் முதல் 200 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.2.80ல் இருந்து ரூ.3.25ஆக உயர்ந்துள்ளது.
201 யூனிட் முதல் 500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.4ல் இருந்து ரூ.4.60 ஆக உயர்ந்துள்ளது.
501 யூனிட் முதல் அதற்கு மேல் யூனிட் வரையில் ரூ.5.75ல் இருந்து ரூ.6.60ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரையிலான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தினால் யூனிட்டிற்கு 45 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 500 யூனிட் வரை பயன்படுத்தினால் முதல் 200 யூனிட்டிற்கு 50 காசுகளும், 201 முதல் 500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 60 காசுகளும், 500 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றிற்கு 85 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
வழிபாட்டு தலங்கள்
* வழிபாட்டு தலங்களை பொறுத்தமட்டில் 120 யூனிட் வரை பயன்படுத்தும் வழிபாட்டு தலங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.5 லிருந்து ரூ.5.75 கட்டணமாக வசூலிக்கப்படும்.
* குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு 500 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ3.50 லிருந்து ரூ.4 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.4 லிருந்து ரூ.4.60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
* விசைத்தறிகளை பொறுத்த மட்டில் 2 மாதம் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.4.50 லிருந்து ரூ.5.20 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
தொழிற்சாலைகள்-கல்விநிறுவனங்கள்
* தொழிற்சாலைகளை பொருத்தமட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து யூனிட்டுகளும் மின் கட்டணம் ரூ.5.50லிருந்து ரூ.6.35 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
* வணிக நிறுவனங்களுக்கு 2 மாதத்திற்கு 100 யூனிட் வரை ரூ.4.30லிருந்து ரூ.5 ஆக உயர்த்தப்படுகிறது. 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ.7லிருந்து ரூ.8.05 ஆக உயர்த்தப்படுகிறது.
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5-லிருந்து ரூ.5.75 ஆகவும், தனியார் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.50-லிருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
* தற்காலிக செயல்பாடுகளுக்கான தற்காலிக மின்சாரம் வழங்கல் மற்றும் கட்டுமானம் மற்றும் ஆடம்பர மின்னொளியூட்டலுக்கு ரூ.10.50-லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்படுகிறது.
நிலைகட்டணம்
* நிலைகட்டணமாக வீடுகளுக்கு 2 மாதம் 100 யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.20 லிருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
* 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.30-லிருந்து ரூ.40 ஆகவும், 500-க்கு மேல் பயன்படுத்தினால் ரூ.40 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
தொழிற்சாலைகளுக்கு 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகவும், இருப்பு பாதைகளுக்கு 250 ரூபாயில் இருந்து ரூ.300 ஆகவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகவும், வணிக நிறுவனங்கள், தற்காலிக விநியோகத்துக்கும் 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.