தமிழக மீனவர் பிரச்சினைத் தீர மத்தியில் வலுவான ஆட்சி அமைய வேண்டும்: ஜெயலலிதா
சென்னை: தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க மத்தியில் வலுவான அரசு அமைய வேண்டும் என முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது நேற்றைய பிரச்சாரத்தில் வலியுறுத்தியுள்ளார்.
வரவிருக்கும் லோக்சபா தேர்தலையொட்டி, நேற்று முந்தினம் காஞ்சியில் தனது பிரச்சாரத்தைத் துவக்கினார் முதல்வர் ஜெயலலிதா. பிரசாரத்தின் 2-ம் நாளான நேற்று, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் கே.என். ராமச்சந்திரனை ஆதரித்து, மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கூட்டணி அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் மக்கள் கடுமையான துன்பங்களுக்கு உள்ளாகி உள்ளனர். துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் தேர்தலாக வரும் தேர்தல் அமையும்.
கடந்த 33 மாதங்களாக தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக, மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல், தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க மத்தியில் வலுவான அரசு அமைய வேண்டும்.
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் காங்கிரஸ் தலைமையிலான அரசை போன்ற மோசமான அரசை இதுவரை பார்த்ததில்லை. இந்த அரசில் பங்கு கொண்ட திமுக 2ஜி ஊழல் மூலம் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்