கல்லூரிக்குத் தேர்வெழுத வந்த மாணவருக்கு அரிவாள் வெட்டு : போலீஸார் தீவிர விசாரணை
திருநின்றவூரில் கல்லூரிக்குத் தேர்வெழுந்த வந்த மாணவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
Recommended Video
திருவள்ளூர் : திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவரை வழிமறித்து மர்மநபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சென்னை ஆவடி அடுத்த அன்னனூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்னார். இவர் தலைமைச் செயலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ரஞ்சித் திருநின்றவூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கும் திருநின்றவூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த வாரம் நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அவர்களது நண்பர்கள் ஆகாஷ்,யோகேஷ்,விக்னேஷ் ஆகிய மூவருடன் சேர்ந்து ரஞ்சித்தை தாக்க திட்டமிட்டார்.
இந்நிலையில், இன்று கல்லூரிக்குத் தேர்வெழுத வந்த மாணவர் ரஞ்சித்தை, சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் மூவரும் கல்லூரி அருகே நடுரோட்டில் வைத்து ரஞ்சித்தை மடக்கினர். அப்போது மறைத்து வைத்து இருந்த பீர் பாட்டிலில் ரஞ்சித்தை தாக்கி பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். பின்னர் சந்தோஷ் உட்பட 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ரஞ்சித்தை சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே கல்லூரி மாணவன் ரஞ்சித்தை கத்தியால் வெட்டிய சந்தோஷ், ஆகாஷ், யோகேஷ், விக்னேஷ் ஆகிய நான்கு பேரையும் திருநின்றவூர் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
பட்டபகலில் நடுரோட்டில் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இந்தச் சம்பவம் சக மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.