சத்துணவு தருவது தொடர்பாக மோதல்... தலைமை ஆசிரியர் மாற்றம்.. மாணவ, மாணவிகள் போராட்டம்
தென்காசி: தென்காசி அருகே சத்துணவு வழங்குவது தொடர்பாக சத்துணவு பணியாளருக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து பெற்றோர்களும், மாணவ, மாணவியரும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரம் அருகேயுள்ளது கருமடையூர் கிராமம். இங்கு கீழப்பாவூர் ஒன்றிய துவக்கப் பள்ளி ஓன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக சுப்பையா என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் அங்குள்ள சத்துணவு பணியாளருக்கும் குழந்தைகளுக்கு நல்ல உணவு வழங்குவதில் பிரச்சனை எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தலைமையாசிரியர் சுப்பையா மத்தாளம் பாறை என்ற ஊருக்கு மாறுதல் வாங்கிச் சென்றுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இன்று ஏராளமானவர்கள் தங்களது குழந்தைகளோடு திரண்டு பள்ளி முன்பு வந்து மீண்டும் அந்த தலைமை ஆசிரியரையே நியமிக்க வேண்டும். அதுவரை பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்றுக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பாவூர்சத்திரம் காவல்நிலைய துணை ஆய்வாளர் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குழந்தைகளும் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.