ஜிஎஸ்டி அமல் எதிரொலி.. தமிழக - கேரள எல்லையில் வணிக வரி சோதனை சாவடி மூடல்
நெல்லை: ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளதால் புளியரையில் தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள வணிகவரி சோதனை சாவடி மூடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பின்படி, மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநில எல்லைகளிலும், வணிகவரித்துறை சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டு, சரக்குப் பொருட்களை பரிசோதித்து, அதற்கான வரி வசூலிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தமிழக, கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பல்வேறு சரக்குக்களை ஏற்றி செல்லும் லாரிகளில் சோதனைகளை நடத்த புளியரையில் தமிழக அரசின் வணிகவரி சோதனை சாவடி அமைக்கபட்டு இருந்தது.
இந்த சோதனை சாவடியை அடுத்து கேரள மாநில வணிகவரி சோதனை சாவடி அமைந்துள்ளது. இரு மாநில எல்லைகளில் இரண்டு சோதனைச் சாவடிகள் இயங்கி வந்தன. இந்நிலையில் இன்று மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியுள்ளதால் புளியறையில் அமைந்துள்ள தமிழக அரசின் வணிக வரித்துறை சோதனை சாவடியை இங்கு பணியில் இருந்த அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நேற்று இரவு மூடினர்.
அதேபோல் கன்னியாகுமரி வணிக வரி சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மற்றும் அமரவிலையில் உள்ள வணிக வரி சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டன.












Click it and Unblock the Notifications