சுஜித் மரணம்.. ஆக்ஸிஜன் பற்றாக்குறை மட்டுமில்லை.. இதுவும் கூட காரணமாக இருந்திருக்கலாம்!
Recommended Video
சென்னை: ஆக்ஸிஜன் பற்றாக்குறை மட்டுமில்லாமல் சுஜித் இறந்ததற்கு மற்றுமொரு காரணமும் இருக்கலாம் என நிபுணர்கள் ஒரு கருத்தை முன்வைக்கின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில் பிரிட்டோ, கலா மேரி தம்பதியின் மகன் சுஜித் (2). இவன் வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.
இவனை மீட்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. முதலில் 28 அடி ஆழத்தில் இருந்த சுஜித் சுமார் 80 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டான். அவனை உயிருடன் மீட்க பல்வேறு குழுவினரும் இயந்திரங்களும் முயற்சித்தன.

சுஜித் உடல் மீட்பு
குழித்தோண்ட தோண்ட கடினமான பாறைகள்தான் கிடந்தன. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் 5ஆவது நாளான நேற்று அதிகாலை ஆழ்துளை கிணறு வழியாகவே சுஜித் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான்.

ஆழ்துளை கிணறு
குழந்தையின் உடல் அழுகிய நிலையில் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. குழிக்குள் துர்நாற்றம் வீசியதாக பாறை மாதிரி எடுத்து வந்த தீயணைப்பு வீரர் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சுஜித் 4 நாட்கள் ஆன நிலையில் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால் பள்ளம் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டு அவனது உடல் ஆழ்துளை கிணறு வழியாக எடுக்கப்பட்டது.

காரணங்கள்
குழந்தை இறப்புக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது ஆக்ஸிஜன் பற்றாக்குறை, ஒரு அடிக்கு மணல் சரிந்ததால் மீட்பு படையினர் அனுப்பிய ஆக்ஸிஜனை சுவாசிக்க முடியவில்லை உள்ளிட்ட காரணங்கள் சொல்லப்பட்டன.

அதிக வெப்பம்
ஆனால் நிபுணர்கள் மற்றொரு காரணத்தையும் முன் வைக்கின்றனர். அதாவது பூமிக்கு மேலே செல்ல செல்ல எப்படி குளிர் எடுக்கிறதோ (எ.டு. மலைப்பிரதேசம்) அது போல் பூமிக்கு கீழே செல்ல செல்ல வெப்பம் அதிகமாக இருக்குமாம். குழந்தை 80 அடி ஆழத்தில் சிக்கியிருந்ததால் நிச்சயம் வெப்பநிலை அதிகமாகவே இருந்திருக்கும் என்கிறார்கள்.

ஈரப்பதம்
இந்த அதீத வெப்பத்தின் காரணமாக உடலும் அதிகப்படியான வியர்வையை வெளியிடும். சுஜித்தின் வியர்வையை அவனை சுற்றியுள்ள மணல் ஈரப்பதத்தின் தேவைக்காக உறிஞ்சிக் கொண்டிருக்கலாம். இதனால் சுஜித்தின் உடலில் நீர் சத்து குறைந்து அவனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.

உண்ணாவிரத போராட்டம்
மனிதன் உயிர் வாழ உணவை காட்டிலும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. எனவேதான் உண்ணாவிரத போராட்டக் காலங்களில் கூட திரவ உணவான ஜூஸை தருகிறோம். நா வறண்டுவிட்டால் தண்ணீரை தேடுகிறோம்.

குழந்தை இறக்க
இந்த நிலையில் தண்ணீரே இல்லாமல் உடலில் இருக்கும் 60 சதவீத தண்ணீரும் உறிஞ்சப்பட்டுவிட்டால் பெரியவர்களாலேயே உயிர் வாழ்வது கடினமான சூழல் என்கிற போது சின்னஞ்சிறிய குழந்தையால் எப்படி உயிர் வாழ்வது சாத்தியமாகும்? எனவே இவையும் குழந்தை இறக்க காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications