கருணாநிதிக்கு விசுவாசமாக இருந்து மோசம் போனேன்- டி. ராஜேந்தர்
சென்னை: பெற்ற பிள்ளைக்காக திமுக தலைவர் கருணாநிதி யாரை வேண்டுமானாலும் இழப்பார் என லட்சிய திமுக தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். கருணாநிதிக்கு விசுவாசம் காட்டிய நான் மோசம் போய்விட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
லட்சிய திமுக தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தரின் பிறந்தநாள் இன்று. ஆனால், தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தராமல் உச்ச நீதிமன்றம் வரை உரிமைக்குரல் எழுப்பிய உன்னத பெண்மணியாக செயல்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில், பிறந்தநாள் கொண்டாட மனமில்லை என டி.ராஜேந்தர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
ஜெயலலிதா முயற்சி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்போராடி உச்ச நீதிமன்றம் வரை உன்னத குரலை உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் தான் காவிரியில் கொஞ்சமாவது வந்து கொண்டிருக்கிறது தண்ணீர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
டி.ராஜேந்தர்
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரினார். காவிரி நீர் குடித்து வளர்ந்தது காரணமாகவே தான் இவ்வாறு தமிழை அடுக்கு மொழியில் பேசிவதாக குறிப்பிட்டார். காவிரி நதிநீருக்காக ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார் என்று கூறிய டி.ராஜேந்தர், அவர் இன்று உடல்நிலை பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
கருணாநிதிக்கு கண்டனம்
தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைவர் தன் பெற்ற பிள்ளைக்காக யாரை வேண்டுமானாலும் இழப்பார். அதனால், தான அந்த காலத்தில் எம்ஜிஆரை திமுகவில் இருந்து தூக்கி எறிந்தார். எம்ஜிஆருக்கு முன்னால் நான் எல்லாம் எம்மாத்திரம் என்று குற்றம் சாட்டினார்.
மோசம் போனேன்
கடந்த தேர்தலில் போது கூட காங்கிரசுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், ஒரு முறை முதல்வராக வேண்டும் என கலைஞர் கலங்கிப் பேசியதால், மாற்று அணியில் கூட சேராமல் ஒதுங்கி இருந்தேன். விசுவாசம் காட்டிய நான் மோசம் போய்விட்டேன் என்று கடுமையாக சாடினார்.