அறிமுகமானது 'அம்மா சிமென்ட்'.. ஜெ. முதல்வராக இருந்தபோது அறிவித்த கடைசி "அம்மா" திட்டம்!
சென்னை: தமிழக அரசின் அம்மா சிமென்ட் திட்டம் இன்று அமலுக்கு வந்தது. சலுகை விலையில் சிமென்ட் வழங்கும் இந்த அம்மா சிமென்ட் திட்டமானது திருச்சியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தை 3 மாதங்களுக்கு முன்பு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதுதான் அவர் முதல்வர் பதவியில் இருந்தபோது கடைசியாக அறிவித்த அம்மா திட்டமாகும். அதன் பின்னர் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயிலுக்குப் போய் விட்டார். இதனால் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.
தற்போது 3 மாத இடைவெளிக்குப் பின்னர் இன்று இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான 470 கிட்டங்கிகளில் இந்த அம்மா சிமென்ட் விற்பனைக்கு வருகிறது. முதல் கட்டமாக திருச்சியில் இன்று விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. ஜனவரி 10ம் தேதிக்குள் அனைத்து கிட்டங்கிகளிலும் இது விற்பனைக்கு வரும்.
50 கிலோ கொண்ட ஒரு மூடை அம்மா சிமென்ட் ரூ. 190க்கு விற்கப்படும். இதன் மார்க்கெட் விலையானது ரூ. 370 முதல் ரூ. 400 வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஏராளமான அம்மா திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா விதைகள், அம்மா மருந்தகம் ஆகியவை அறிமுகமாகின. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இந்த வரிசையி்ல் தற்போது அம்மா சிமென்ட் வந்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக தனியார் சிமென்ட் தயாரிப்பாளர்களிடமிருந்து 2 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட்டை தமிழ்நாடு அரசு விலைக்கு வாங்கி அதை அம்மா சிமென்ட் திட்டத்தின் மூலம் மக்களுக்கு சலுகை விலையில் வழங்கும்.
பஞ்சாயத்து யூனியன்கள், நகர பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள சிவில் சப்ளைஸ் கிட்டங்கிகளில் 50 கிலோ மூட்டை ரூ. 190 என்ற விலைக்கு கிடைக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த சிமென்ட்டை வாங்குவதற்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. அதன்படி 100 சதுர அடி பரப்பளவிலான வீடுகளைக் கட்டுவோருக்கு 50 மூடைகளும், 1500 சதுர அடி வரை வீடு கட்டிக் கொள்வோருக்கு அதிகபட்சம் 750 மூடைகள் வரை விற்பனை செய்யப்படும்.
இந்த சிமென்ட்டைப் பெற விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம் மற்றும் விஏஓ, வருவாய் அதிகாரிகள், பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளர்கள், பஞ்சாயத்து யூனியன் ரோட் இன்ஸ்பெக்டர் ஆகியோரின் சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
வீடு கட்டுவது தவிர வீட்டைப் பழுது பார்க்கும் பணிக்கு குறைந்தது 10 மூடை முதல் அதிகபட்சம் 100 மூடை சிமென்ட் வரை விற்பனை செய்யப்படும்.