10 வருஷமா கட்சியிலே இல்லாதவர் தினகரன்... முதல்வர் கேலி!
டிடிவி தினகரன் 10 ஆண்டுகளாக கட்சியிலேயே இல்லாதவர் என்றும் அவரால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை : டிடிவி. தினகரன் பக்கம் மக்கள் இல்லை, அவரால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். 10 ஆண்டுகளாக தினகரன் கட்சியிலேயே இல்லை அவரால் அப்போது என்ன பாதிப்பு வந்தது என்றும் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பின்னர், கட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட பிரதமரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. நேரம் கிடைத்த உடனேயே சென்னையில் மிக பிரம்மாண்டமான முறையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்கும்.
ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டிருப்பதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொள்கிறது. ஹஜ் மானியம் ரத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்.
வெளி மாநிலம் சென்று படிக்கும் மாணவர்கள் மாநில அரசிடம் பதிவு செய்ய வேண்டும். வெளி மாநிலத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க அரசு உரிய நடவடிக்கையை எடுக்கும்.
டிடிவி தினகரன் கட்சி தொடங்குவது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். டிடிவி தினகரனால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை, 10 ஆண்டுகாலம் கட்சியிலேயே இல்லாதவர், அவர் எங்கு போனார் எனக் கூட தெரியாது அப்போதெல்லாம் கட்சி ஏதாவது பாதிப்பை சந்தித்ததா. ஊடகங்கள் தான் தினகரனை பெரிதுபடுத்துகின்றன, மக்கள் தினகரனை பொருட்படுத்தவே இல்லை.
மதுசூதனன் கட்சி தலைமைக்கு எழுதிய கடிதமானது உட்கட்சி பிரச்னை, அதை பொதுவெளியில் விவாதிக்க விரும்பவில்லை. இது குறித்து மதுசூதனனிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அவர் மன நிறைவு பெற்றுள்ளார். பட்டாசுத் தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞரை நியமித்து பட்டாசுத் தொழிலாளர்களுக்கு உரிய நீதியை பெற்றுத் தருவோம்.
காவிரியில் இருந்து தண்ணீர் பெறுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் டெல்டா பாசனத்திற்கு போதிய நீர் இல்லை, கிடைத்த நீரை சரியாக பகிர்ந்து அளித்துள்ளோம். போதிய நீர்இல்லாத காரணத்தால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம், பிரதமர், கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதினோம். ஆனால் எந்த பதிலும் இல்லை, டெல்டா விவசாயிகளின் நெற்பயிரை காப்பாற்ற வேண்டும் என்று தான் மீண்டும் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஓன்றிரண்டு நாட்களில் இருக்கின்ற நீரை பகிர்ந்து கொடுத்து, விவசாயிகள் நல்ல விளைச்சலை பெற தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை கிண்டியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தோம், கட்சி அலுவலகத்திலும் எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய பட்ஜெட்டிற்கு முன்பு நடைபெறும் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக இன்று டெல்லி செல்கிறேன், வாய்ப்பு கிடைத்தால் பிரதமரை சந்திப்பேன். பிரதமரை சந்திக்கும் போது காவிரி நீர் பிரச்னை குறித்து நிச்சயம் தமிழகத்தின் உரிமை காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவேன்.
கமல்ஹாசன் கட்சி தொடங்கிய பிறகு அது குறித்து கருத்து தெரிவிக்கிறோம். தனிக்கட்சித் தொடங்கினாலும் சரி, கூட்டணி அமைத்தாலும் சரி கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்குவதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.