என்னத்த... சின்னம் கிடைச்சா மட்டும் போதுமா?.... திருநாவுக்கரசர் பொளேர்!
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் மட்டும் இவர்கள் தனித்து செயல்பட்டு விடவாப் போகிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் இவர்கள் தனித்து செயல்படப் போகிறார்களா அல்லது பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படப் போகிறார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் மதுசூதனன் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பது குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்தில் கூறி இருப்பதாவது :தேர்தல் ஆணையம் பெரும்பாலும் சின்னத்திற்காக இரண்டு அணிகள் போட்டி போடும் போது அவர்களுக்கு இருக்கும் எம்பி, எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவைப் பொருத்து கட்சியின் பெயரையும், சின்னத்தையும் ஒதுக்கி வருகிறது. சில நேரங்களில் அதற்கு மாறாக தேர்தல் ஆணைய தீர்ப்பு இருந்துள்ளது.
எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜா அணி, ஜெ அணி என்று இரண்டாக பிளவுபட்ட போது ஜானகிக்கு அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்த போதும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. மாறாக கட்சியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கியது. இதனையடுத்து ஜானகி அணியும், ஜெயலலிதா அணியும் இணைந்த பிறகே முடக்கப்பட்ட சின்னம் விடுவிக்கப்பட்டது.

பல அணிகள்
உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியில் பிரச்னை ஏற்பட்ட போது எண்ணிக்கையின் அடிப்படையில் அகிலேஷ் யாதவிற்கு சின்னம் ஒதுக்கி இருக்கிறார்கள் அதுவும் நடந்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு 2 மூன்று கோஷ்டிகளாக்கினார்கள், மைத்ரேயன் எம்பி கூட ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று கூறி இருக்கிறார்.

தெரிந்த விஷயம் தான்
எனவே இரண்டு அணிகளும் விருப்பப்பட்டு இணைந்ததோ, விருப்பப்படாமல் இணைந்ததோ. ஆனால் அவர்களை சேர்த்தது பாஜகவின் முயற்சி தான். பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவின் ஆலோசனையின் பேரிலேயே ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்துள்ளனர். அப்படி இணைப்பு நடந்த போதே தெரிந்த விஷயம் தான் இவர்களுக்குத் தான் சின்னம் கிடைக்கும் என்பது.

அதிமுக பலப்படுத்தப்படுவது ஏன்?
நிபந்தனைகளின் பேரில் தான் இவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டிருக்கும். அதிமுகவின் இந்த அணியை பலப்படுத்தி அவர்களுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடத் தான் இந்த திட்டம். ஏனெனில் பாஜகவால் தனித்து போட்டியிட்டு வாக்கு பெற முடியாது குறைவான வாக்குகளே அவர்களுக்கு கிடைக்கும் என்பது தெரியும்.

பாஜகவுடன் கூட்டா?
அதிமுக தனித்து செயல்படப் போகிறதா, அல்லது பாஜகவின் ஒரு கிளை போல செயல்படுவார்களா என்பது பொருத்திருந்து பார்த்தால் தான் தெரியும். வழக்குகள், பாஜகவின் மிரட்டல்களுக்கு பயந்து அதிமுக செயல்படுமா அல்லது தனித்து செயல்படுமா என்று காலம் தான் பதில் சொல்லும்.

பலமாக வேண்டுமானால் இருக்கலாம்
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல அதிமுக ஸ்திரத்தன்மையோடு இல்லை. தொண்டர்கள் பழையபடி ஒன்றுகூட மாட்டார்கள், எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி, தீபா அணி என தொண்டர்கள் சிதறிக் கிடக்கிறார்கள். வேண்டுமானால் இரட்டை இலை சின்னம் கிடைத்தது அவர்களுக்கு கூடுதல் பலமாக இருக்கலாம் அவ்வளவு தான் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications