எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் சட்டவிரோதமானது.. அரசியல் தலைவர்கள் கருத்து!
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தது சட்டவிரோதமானது என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் சட்டவிரோதமானது என்று தமிழக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : ஒரு பெரிய ஜனநாயகப் படுகொலையை சபாநாயகர் செய்திருக்கிறார். வரலாற்றில் இகழப்படக்கூடிய நபராக சபாநாயகர் இருப்பார், சபாநாயகரிடத்தில் பெருந்தன்மையை எதிர்பார்த்தேன், ஆனால் அவர் குறுகி வட்டத்திற்குள் சிக்கியிருக்கிறார். நீதியை 18 எம்எல்ஏக்களுக்கு நீதிமன்றம் வழங்கும்.
சட்டசபையில் இது வரை நடந்த எல்லா விஷயங்களுமே மற்றவர்கள் சொல்லித்தான் சபாநாயகர் என்ற அழுக்கை பெற்றுள்ளோம். 18 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறானது, அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு தான்தோன்றித் தனமாக இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அடுத்த தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் கூட் டெபாசிட் வாங்க மாட்டார்கள் என்று கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது : தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறினார். முதல்வருக்கு பெரும்பான்மை கிடைக்காது என்ற நோக்கத்துடன் பதவியை பறித்திருப்பது சட்டப்படி சரியானதல்ல ஜனநாயக விரோதமானது என்று தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியதாவது : 18 எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்ததால் தகுதி நீக்கம் செய்தது சரியான நடைமுறையல்ல. எடப்பாடி பழனிசாமி அரசு எம்எல்ஏக்களை நீக்கிவிட்டு தங்கள் அரசுக்கு பெரும்பான்மை இருப்பது போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறது என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சயின் சட்டமன்றத் தலைவர் ராமசாமி கூறியதாவது : மக்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஏற்றக் கொள்ளவே முடியாது.