டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முற்றுகை... வேல்முருகன் தலைமையில் போராட்டம்!
தமிழ்நாடு அரசுப் பணியில் வெளிமாநிலத்தவரை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
சென்னை : அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தவரை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் டிஎன்பிஎஸ்சி அலுவலக முற்றுகைப் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசுப் பணியில் வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவரைச் சேர்க்கக் கூடாது, 100 விழுக்காடு தமிழ்நாடு அரசுப் பணிகளையும் மண்ணின் மக்களுக்கே வழங்கிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன். தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புகளில் "தமிழ் வழியில் பயின்றவர்க்கு" முன்னுரிமை கொடுக்க வேண்டும், தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு சார்ந்த பணிகளில் 90 விழுக்காட்டினை தமிழகத்தவர்க்கே ஒதுக்கிட வேண்டும் உள்ளிட்ட மேற்கண்ட கோரிக்கைகளுக்காக தனி சட்டம் இயற்றுமாறும் வேல்முருகன் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சியின் புதிய விதியைக் கண்டித்தும் அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் டிசம்பர் 12ம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் முறைகேடுகள், குளறுபடிகளுக்கு முடிவுகட்டுமாறும் தமிழக அரசை வலியுறுத்தி போராட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அரசுப் பணிகளிலேயே வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவரை நியமிக்க ஏதுவாக, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணய விதிகளையே திருத்தியமைத்திருக்கிறது தமிழக அரசு. இது மண்ணின் மக்களுக்கு வேலை இல்லாமல் செய்து அவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மனித உரிமை மீறல் நடவடிக்கை என்று போராட்டத்தின் போது பேசிய வேல்முருகன் குற்றம்சாட்டினார்.
டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து வேல்முருகன் உள்ளிட்டோர் மாலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications