தாறுமாறாக உயர்ந்த "கிக்" விற்பனை.. விசாரணைக்கு உத்தரவிட்ட லக்கானி!
சென்னை: தமிழகத்தில் மது விற்பனை அளவுக்கு அதிகமாக இருந்து வருவதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கத்திற்கு மாறாக 37 சதவீத அளவுக்கு மது விற்பனை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்தே இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டுள்ளது. அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்குத் தர மது வகைகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனவா என்பதை தேர்தல் பார்வையாளர்கள் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக லக்கானி கூறியுள்ளார்.
தற்போது கோடை காலம் என்பதோடு தேர்தல் காலமும் சேர்ந்துள்ளதால் மது விற்பனை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
விஸ்கி விற்பனை சரிவு
வெயில் காலம் என்பதால் விஸ்கி விற்பனை சரிந்துள்ளதாம். விஸ்கி விற்பனையில் பெரிய அளவில் உயர்வு இல்லை என்று டாஸ்மாக் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
ஜில் ஜில் பீர் விற்பனை உயர்வு
அதேசமயம், பீர் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பிராந்தி, ரம் ஆகியவற்றின் விற்பனையும் 15 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாம்.
வருவாயும் அதிகம்
அதேபோல வருவாயும் அதிகரித்துள்ளதாம். கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில் இருந்ததை விட இப்போது அதிக அளவிலான விற்பனையும், வருவாயும் காணப்படுகிறதாம்.
மே 14 கூட்டம் அலை மோதும்
மே 14ம் தேதி மாலை 5 மணியிலிருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 19ம் தேதி வரை மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே மே 14ம் தேதி பகல் முழுவதும் விற்பனை பயங்கரமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நகரத்தில் அதிகம்
பிராந்தி விற்பனையானது கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிகமாக உள்ளதாம். அதாவது 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாம். பீர் வகைகளில் கிங்பிஷர் மற்றும் பிரிட்டிஷ் எம்பயர் வகைகளுக்கு செம கிராக்கி உள்ளதாம்.
37 சதவீதம் அதிகரிப்பு
இப்படியாக தமிழகம் முழுவதும் விற்பனை பரவலாக அதிகரித்துள்ளது. இந்த உயர்வானது 37 சததவீதமாக உள்ளதுதான் தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்தே விசாரணைக்கு லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
மது கடத்தல் அதிகரிப்பு
இந்த நிலையில் புதுச்சேரியிலிருந்து பெருமளவில் மது கடத்தி தமிழகத்திற்குள் கொண்டு வரப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்தக் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையிலும் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.