‘ஊருக்குப் போறோம், வீட்டைப் பார்த்துக்கோங்க..’ பல் டாக்டருக்கு வந்த குறுந்தகவல்கள்
சென்னை: திருட்டுப்பயத்தைத் தடுப்பதற்காக மாநகரப் போலீசார் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பல் டாக்டர் ஒருவரை பிரச்சினையில் சிக்க வைத்துள்ளது. தவறுதலாக அவசர கால தொடர்பு எண்ணில் பல்டாக்டர் ஒருவரின் தொலைபேசி எண்ணை போலீசார் போட்டு விட்டதால், பொதுமக்களிடமிருந்து வரும் குறுந்தகவல்கள் மற்றும் அழைப்புகள் சம்பந்தப்பட்ட டாக்டர் பாடாய் படுத்துகிறதாம்.
நேற்று காலை தொடர்ந்து செல்போனில் இருந்து ‘பீப்..பீப்' சத்தம் வரவே, நமக்கு யார் இவ்வளவு மெசேஜ் அனுப்புகிறார்கள் என்ற குழப்பத்தோடு செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார் மாம்பழத்தில் வசித்து வரும் பல் டாக்டர் ப்ரீத்தி.
செல்போன் இன்பாக்ஸில் அடுத்தடுத்து வந்து குவிந்த குறுந்தகவல்களில் பெரும்பாலும் பூட்டப்பட்ட வீடுகள் எனத் தொடங்கியிருந்தது ப்ரீத்தியைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. மேற்கொண்டு அத்தகவல்களைப் படித்த போது, அதில் பொதுமக்கள் பலர் தாங்கள் வெளியூர் செல்வதாகக் கூறி தங்களது வீட்டு முகவரியைக் கொடுத்துள்ளனர்.
குறுந்தகவல்களைத் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. முதலில் யாரோ விளையாடுகிறார்களோ என நினைத்த ப்ரீத்திக்கு பின்னர் தான் நடந்த குழப்பம் விளங்கியுள்ளது.
வெளியூர் செல்லும் பொதுமக்கள் தங்கள் வீட்டு முகவரியை போலீசில் தெரிவித்து சென்றால் திருட்டு சம்பவம் குறையும் என மாநகர காவல்துறை ஆரம்பித்திருக்கும் திட்டத்தில் தவறுதலாக தனது தொலைபேசி எண் வழங்கப்பட்டதே குழப்பத்திற்குக் காரணம் என்பது ப்ரீத்திக்குப் புரிந்தது.
உடனடியாக இது குறித்து தனது கணவருக்கும், அதனைத் தொடர்ந்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார் ப்ரீத்தி. மேலும், இது குறித்து ப்ரீத்தி கூறியதாவது, ‘பொதுவாக தினந்தோறும் எனக்கு சில குறுந்தகவல்கள் மட்டுமே வரும். அவை பெரும்பாலும் மருத்துவமனையிலிருந்து எனது நோயாளிகளின் உடல்நிலை குறித்த தகவல்களாகவே இருக்கும். ஆனால், நேற்று வந்த குறுந்தகவல்களைப் பார்த்து முதலில் குழம்பி விட்டேன். பின்னர் தான் தவறு எங்கு நடந்தது என்று புரிந்தது.
கடைசியில் 100 என்ற எண்ணுடன் முடியும் இந்த தொலைபேசி எண்ணை கடந்த ஆறு வருடங்களாகப் பயன் படுத்தி வருகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
விரைவில் இத்தவறு சரி செய்யப்படும் என போலீசார் வாக்குறுதி அளித்துள்ளனராம்.