திருத்தணியில் 114, சென்னையில் 107 - நெருப்பை கொட்டிய அனல் காற்று
திருத்தணியில் இன்று 114 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையில் 107 டிகிரி வெப்பம் பதிவானது. அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
சென்னை: திருத்தணியில் இந்த வாரத்தின் இரண்டாவது நாளாக இன்று 114 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழக தலைநகரான சென்னையில் இந்தாண்டு இதுவரையில்லாத அளவாக 107 டிகிரி வெப்பம் பதிவானது. பல நகரங்களில் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை அண்ணா சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் பகல் 11 மணிக்கே அனல் காற்று வீசியதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்பம் அக்னியாய் தகித்து வருகிறது. 114 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சில தினங்களுக்கு முன்பு பதிவானது. ஆங்காங்கே கோடை மழையும் பெய்து வருகிறது. இன்றும் அதிகபட்ச வெப்ப அளவாக திருத்தணியில் 114 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது.
சென்னையில் அனல் காற்று
சென்னையில் இந்தாண்டு இதுவரையில்லாத அளவாக 107 டிகிரி வெப்பம் பதிவானது.சென்னை அண்ணா சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் பகல் 11 மணிக்கே அனல் காற்று வீசியது. இருசக்கர வாகன ஓட்டிகள் அனல் காற்றை தங்க முடியாமல் தவிப்புக்கு ஆளாகினர். பலர் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கியுள்ளனர்.
வறண்ட காற்று
கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் 106 டிகிரி பதிவாகியிருந்தது. இன்று அதிகபட்ச அளவாக இன்று 107 டிகிரி வெப்பம் பதிவானது. கடல்காற்று வீசினாலும் அதில் ஈரப்பதம் இல்லாதததால் வறண்ட காற்றே வீசுகிறது. இது பத்தாண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச அளவாகும்.
அனல்காற்று நீடிக்கும்
தமிழகத்தை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் அனல்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மக்கள் பகல் நேரங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். குடிநீர், பழரசங்களை அவ்வப்போது பருகவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இடியுடன் மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரியின் தளி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தகவல் அளித்துள்ளது.
அக்னி நட்சத்திரம்
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. 28வரை நீடிக்கும். இன்னும் 10 நாட்களுக்கு அக்னியின் ஆட்டம் அதிரடியாகவே இருக்கும். அனல் காற்று வீசும் என்று எச்சரித்துள்ளதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருத்தணியில் 114 டிகிரி பாரன்ஹீட்
இந்த நிலையில் இன்று மீண்டும் திருத்தணியில் 114 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது. சேலம், ராஜபாளையம், உள்ளிட்ட பல நகரங்களில் 110 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவானது. சாலைகளில் நெருப்புத்துண்டுகளை வாரி இறைத்தது போக அனல் காற்று வீசி மக்களை அவதிக்கு ஆளாக்கியது. வெப்பத்திற்கு பயந்து வீடுகளுக்குள் முடங்கியவர்கள் புழுக்கத்தில் சிக்கித்தவித்தனர்.