கலிங்கபட்டி கலகம்.. அதிமுக- மதிமுக மோதலால் தொடரும் பதற்றம்!
கலிங்கப்பட்டி: மதிமுக பொதுச்செயலர் வைகோ அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அதிமுகவினர் விமர்சித்ததைத் தொடர்ந்து எழுந்த மோதலால் பதற்றம் நீடித்து வருகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தண்டனை மற்றும் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதற்காக ஏற்பாட்டை இந்திய ஜெயலலிதா பேரவை செயலர் மா.செ.துங்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி, முன்னாள் கடையநல்லூர் எம்.எல்.ஏ. சுப்பையாபாண்டியன் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய சுப்பையாபாண்டியன் வைகோவை விமர்சித்து பேசினார்.
இதை எதிர்த்த மதிமுகவினர் பேச்சை நிறுத்தும்படி போலீசிடம் புகார் கூறினர். அதையும் மீறி, சுப்பையா பேச்சைத்தொடரவே, அதிமுகவினருக்கும் மதிமுகவினருக்கும் உண்ணாவிரத பந்தலிலேயே வாக்குவாதம் நடைபெற்றது.
இதையடுத்து இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, கைகலப்பு ஏற்பட்டு, கற்கள் மற்றும் சேர்கள் வீசப்பட்டன. இதில், இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.
மேலும் மோதல் மற்றும் பதற்றத்தை தணிக்க போலீஸ் படை குவிக்கப்பட்டது. இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கரிவலம் வந்தநல்லூர் காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தன் கட்சி பிரமுகர் ஒருவரின் இறுதிச்சடங்கிற்காக கலந்துகொள்ள சென்ற வைகோ, தகவல் அறிந்து கலிங்கப்பட்டி வந்தார். தொண்டர்களை அமைதிப்படுத்திய அவர், கட்சி தலைமை தொண்டர்களூக்கு அறிவுறுத்தாதன் விளைவே இந்த சம்பவம் என்று ஆவேசப்பட்டார். கலிங்கப்பட்டியில் பதற்றம் இன்னும் தணியாமல் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications