ஜெ. மரணம்.. ஒரு மாத தாமதத்திற்குப் பின்.. போயஸ் கார்டனிலிருந்து திங்கள் கிழமை விசாரணை தொடக்கம்!
ஜெயலலிதா மரணம் குறித்து வரும் திங்கள் கிழமை முதல் போயஸ் கார்டனில் இருந்து விசாரணை தொடங்கும் என நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து வரும் திங்கள் கிழமை முதல் போயஸ் கார்டனில் இருந்து விசாரணை தொடங்கும் என நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டர் மாதம் 22ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறி பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.
விசாரணை ஆணைய தலைவர்
மூன்று மாதத்தில் விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அண்மையில் பொறுப்பேற்றார்.
போயஸ்கார்டனில் இருந்து விசாரணை
விசாரணை நடைபெறும் அலுவலகம் சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணை நடைபெறும் அலுவலகத்திற்கு இன்று வந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி, வரும் திங்கள் கிழமை முதல் போயஸ் கார்டனில் இருந்து விசாரணை தொடங்கும் என தெரிவித்தார்.
உறுதிமொழிப் பத்திரம் வடிவில்
ஜெயலலிதா மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஜெ. மரணம் குறித்து நேரடியாக தகவல் தெரிந்தவர்களும் நேரடி தொடர்பு உடையவர்களும் நவம்பர் 22ஆம் தேதிக்குள் தனது அலுவலகத்தில் உறுதிமொழிப் பத்திரம் வடிவில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
குறித்த நேரத்தில் விசாரணை
தகவல்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் என்றும் அவர் கூறினார். குறித்த காலத்திற்குள் விசாரணை செய்து தமிழக அரசிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்தார்.