விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது... மத்திய அமைச்சர் திட்டவட்டம்!
விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி: விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார். கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்றும் அவர் கூறினார்.
தமிழக விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் டெல்லியில் 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.
அவர்களை சந்தித்த மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது நாட்டில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதுமில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் பிரச்சனைக்கு நீண்டகால தீர்வாக அமையாது என்றும் அவர் கூறினார்.
விவசாயிகளுக்கான இடுபொருட்களின் விலையை குறைப்பது மற்றும் விலை பொருட்களுக்கான சந்தையை உருவாக்குவதும் தான் விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்று ராதாமோகன் சிங் தெரிவித்தார். மத்திய வேளாண் அமைச்சரின் இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.