போராடினால் கைதா.. கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் கைதுக்கு திருமாவளவன் கண்டனம்
கதிராமங்கலம் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கோரியுள்ளார்.
சென்னை: எண்ணெய் கிணறுக்கு எதிராக கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக கடந்த 30ம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தி அடாவடியில் ஈடுபட்டனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பேராசியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசாரை கைது செய்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன், அறவழியில் போராடிய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும்,கதிராமங்கலம் கிராம மக்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். ஓஎன்ஜிசிக்கு எண்ணெய் எடுக்க கொடுக்கப்பட்ட தடையில்லா சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.