தமிழகத்தின் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.. முதலீடு வரவும் வாய்ப்பு இல்லை - திருநாவுக்கரசர்
சென்னை: தமிழகத்தின் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பதை கணக்கு தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை வெளிப்படுத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக ஆட்சியில் நாள்தோறும் குறைபாடுகள், குளறுபடிகள், முறைகேடுகள், ஊழல்கள் அதிகரித்து வருகின்றன. இது பற்றி அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டினாலும் அதற்கு ஆட்சியாளர்கள் உரிய பதில் அளிப்பதில்லை.
ஆனால், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தமிழக அரசின் பல்வேறு தவறுகள், முறைகேடுகள் ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 41 பொதுத்துறை நிறுவனங்களில் 21 நிறுவனங்கள் ரூ.81 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் 115 மெகாவாட் மின்சாரத்தை குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ததில் மட்டும் ரூ.11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுபோல போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள பெரும் இழப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தமிழக அரசின் நிதிநிலை அதல பாதாளத்துக்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பது குறித்து ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதே நேரத்தில் தமிழக அரசின் வரி வருவாயும் சரிந்து வருகிறது. தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 5 லட்சம் கோடியை தாண்டி விட்டது. இத்தகைய சீரழிந்த பொருளாதார நிலை இருக்கும் தமிழகத்தில் முதலீடுகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
கணக்கு தணிக்கை துறையின் அறிக்கையில் தமிழக அரசுக்கு அபாயச் சங்கு ஊதப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு, வேலைவாய்ப்புகள் இல்லாத நிலை உருவாகியுள்ளதை அறிக்கை வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு பொருளாதார நிலையை மீட்டெடுக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.