புரட்சி பாரதம் கட்சி போராட்டத்தால் ஸ்தம்பித்த திருவள்ளூர்.. கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டது!
புரட்சி பாரதம் கட்சி போராட்டத்தால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் : புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தியை காவல்துறையினர் அவமதித்ததாகக் கூறி கட்சியினர் 2000 பேர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதை அடுத்து அலுவலகம் மூடப்பட்டது.
புரட்சி பாரதம் கட்சியின் தலைவரான ஜெகன் மூர்த்தியை மாவட்ட காவல்துறை டி.எஸ்.பி புகழேந்தி அவமதித்து விட்டதாகவும், சாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசியதாகவும் கூறி அக்கட்சியினர் 2000 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனால் ஏற்பட்ட பரபரப்பை அடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. மாவட்ட குறை தீர்ப்பு நாளில் ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டு ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகியும், காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.