கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா: 1,546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை
கொல்லங்கோடு தூக்க திருவிழாவில் 1,546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
கன்னியாகுமரி: பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் 1546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருமணம் முடிந்து குழந்தை பேறு கிடைக்கப் பெறாத தம்பதியினர், குழந்தை பேறு வேண்டி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனை வேண்டிக் கொள்வார்கள்.
அந்த வேண்டுதலின் பலனாக குழந்தை பேறு பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளை பங்குனி மாதம் பரணி நாளில் நடைபெறும் தூக்க திருவிழாவுக்கு அழைத்து வந்து தூக்க நேர்ச்சை செலுத்துவது வழக்கம்.
அதன்படி, இரண்டு சக்கரங்கள் கொண்ட வண்டியில், இரண்டு துாக்க மரம் வைக்கப்பட்டு, அதில் நான்கு வில்கள் கட்டப்பட்டிருக்கும். துாக்க காரர்கள் துணியால் இந்த வில்லில் கட்டப்படுவர்.
பின்னர், அவர்கள் நேர்ச்சை குழந்தைகளை கையில் தாங்கியதும், துாக்கமரம் மேலே உயரும். இந்த வண்டியை, பக்தர்கள் இழுத்து கோவிலை வலம் வருவர்.
இந்த ஆண்டிற்கான தூக்க திருவிழாவினை கடந்த, 12-ம் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.
விழாவின் 10-ம் நாளான நேற்று தூக்க நேர்ச்சை தொடங்கியது. இதில் பதிவு செய்யப்பட்ட 1,546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சி நிறைவேற்றப்பட்டது.
நேற்று பகலிலும், இரவிலும் தொடர்ந்து நடைபெற்ற தூக்க நேர்ச்சை நிகழ்ச்சி தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்விழாவினை காண குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளாவிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.