தீபாவளி சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட் ரிசர்வேசன் சென்னையில் தொடங்கியது- சிறப்பு கவுண்டர்கள் திறப்பு
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அரசுப்பேருந்துகளுக்கான முன்பதிவு சென்னையில் தொடங்கியது. வரும் 26, 27, 28ம் தேதிகளில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. கோயம்பேட்டில் வழக்கமாக முன்பதிவு செய்யும் மையங்கள் தவிர கூடுதல் மையங்களும் திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தீபாவளிப் பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகைக்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களில் இருந்து பிற இடங்களுக்கும் மொத்தம் 21 ஆயிரத்து 289 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில், அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் 26, 27, 28 ஆம் தேதிகளில் வெளியூர் செல்வதற்காக கூடுதலாக டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டு, டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
வழக்கமான டிக்கெட் முன்பதிவு மையங்களை தவிர கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் சானடோரியம் ஆகிய பேருந்து நிலையங்களில் மொத்தம் 30 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் எளிதாக டிக்கெட் பெற முடிவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்
தீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வரும் 26, 27, 28 ஆகிய தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, செங்குன்றம் வழியாக ஆந்திராவுக்கு செல்லும் இரு மாநில அரசுப் பேருந்துகளும் அண்ணாநகரில் (மேற்கு) இருந்து இயக்கப்படுகிறது.
தற்காலிக பேருந்து நிலையங்கள்
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் வரை செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எதிரே மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.
திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்தும், பூந்தமல்லி வழியாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஒசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளன.
எளிதான பயணத்திற்கு சிறப்பு ஏற்பாடு
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வகையில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், முன்பதிவு செய்யாத பயணிகள் அனைவரும் 26 முதல் 28ம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு சென்று பயணம் மேற்கொள்ளலாம். தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று, அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்துக்குரிய பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.