பிளஸ் டூவைப் போல 10- வகுப்புக்கு மாணவர்களுக்கும் ரேங்க் கிடையாது!
மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இனி ரேங்க் முறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்திலேயே முதன்முறையாக சிபிஎஸ்இ முடிவுகளை போல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் இனி ரேங்க் முறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் போது மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும், அவர்களில் முதல் இடம் இரண்டாம் இடம் என்ற முடிவுகள் இருக்காது.
ஆனால் தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு மாநில அளவில், மாவட்ட அளவில் முதல் இடம் என்று மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் ரேங்க்கை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளின் வணிக போட்டியும் அதிகரித்து வந்தது. இதனை தவிர்க்கும் வகையிலும், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்கள் தற்கொலை, மனஉளைச்சலுக்கு ஆளாவதை தடுக்கவும் இந்த ரேங்க முறையை ஒழிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
நாளை பிளஸ் 2 தேர்வும் மே 19ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ள நிலையில் இனி ரேங்க் முறை கிடையாது, மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை மட்டும் தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் முதல் இடம், இரண்டாம் இடம் என கொண்டாடப்படுவதைத்தவிர வேறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, இது மாணவர்களுக்கு சிறப்பான அறிவிப்பு என்றும் அவர்களின் மன உறுதியை அதிகரிக்க வழிவகுக்கும் என்பது கல்வியாளர்கள் கருத்து,