8 நாட்ளாக தவிக்கும் மக்கள்... மவுனம் காக்கும் அரசு... இது தானா "அம்மா"வின் ஆட்சி?
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் 8வது நாளாக நீடிக்கும் நிலையில் மக்களின் தவிப்பை பார்த்து அரசு மவுனம் காத்து கொண்டிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் 8வது நாளாக நீடிக்கும் நிலையில் மக்களின் தவிப்புகளை அரசு மவுனமாக வேடிக்கை பார்ப்பதாக அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
ஊதிய உயர்வு வேண்டும், எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டு நியாயமாகத் தான் போராடுகிறோம் என்று போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை கூறுகின்றன. பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது ஒரு சில தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே வேலைநிறுத்தத்தை தூண்டுவதாக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கைகாட்டியதோடு இனி பேச்சுவார்த்தையே கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இந்நிலையில் சட்டசபையில் முதல்வர் பழனிசாமி நிலுவைத் தொகை ரூ.750 கோடி எஸ்பிஐ வங்கியில் இருந்து கடனாக பெற்று உடனடியாக வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இதனையடுத்து கடந்த 4ம் தேதி அரசு புதிததாக போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தால் இடைக்காலமாக வேலைநிறுத்ததை கைவிட தயாராக இருப்பதாக போக்குவரத்து ஊழியர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சிரமத்தில் மக்கள்
கடந்த வெள்ளக்கிழமை மாலை தொடங்கிய வேலைநிறுத்தம் 8வது நாளாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று முடிந்துவிடும் என்று மக்களும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தங்களது அன்றாட பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 8 நாட்களாக போக்குவரத்துக்கு செலவு செய்ததே பலரின் பர்ஸை காலியாக்கியுள்ளது.
மக்கள் உயிருக்கு மதிப்பில்லையா?
போக்குவரத்து ஊழியர்களும், அரசும் மாறி மாறி மக்களை வைத்து பந்தாடி வருகின்றனர். இதில் கொடுமையின் உச்சம் என்னவென்றால் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து ஓட்டப்படும் பேருந்துகளில் பயணித்து 5 பேர் உயிரிழந்ததோடு, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பலர் காயமடைந்துள்ளனர்.
மக்களின் உயிர் பற்றி அரசுக்கு எந்த கவலையுமே இல்லையா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. மக்களுக்காக சிறப்பாக சேவை செய்யும் அரசு என்று கூறிக்கொண்டு 8 நாட்களாக மக்களை தவிப்பில் விட்டுள்ளது தான் சிறந்த ஆட்சிக்கான அடையாளமா. பிரச்னைகள் வந்தால் அதனை உடனடியாக தீர்க்க வேண்டியது தான் அரசின் செயல்பாடு.
நீதிமன்றத்திடம் தள்ளிவிட்டு வேடிக்கை
ஆனால் அண்மையில் தமிழகத்தில் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதனை நீதிமன்றம் பக்கம் திசைதிருப்பிவிட்டு உத்தரவுக்காக காத்திருப்பது வாடிக்கையான விஷயமாகவிட்டது. கடந்த திங்கட்கிழமை முதல் சட்டசபை கூட்டமும் நடைபெற்று வருகிறது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூட மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகளை சரிவர பிரதிபலித்ததாக தெரியவில்லை.
அரசு யோசித்ததா?
மக்களின் அன்றாட வாழ்க்கையே இயல்பு நிலையில் இல்லாத சூழலில் சிறப்பான ஆட்சி நடப்பதாக சட்டசபையில் மார்தட்டி பேசிக் கொள்கின்றனர் ஆட்சியாளர்கள். பிரதானமான இந்த பிரச்னையை தீர்க்க முடியாமல் தமிழகத்தின் பிற பிரச்னைகள் பற்றி விவாதித்து வருகிறது தமிழக சட்டசபை.
பணிக்கு சென்று வருவோரை விட அன்றாடம் பள்ளி சென்று திரும்பும் மாணவர்களின் நிலை என்ன என்ற அரசு யோசித்ததா? அன்றாட பாஸ் வைத்து பயணிக்கும் மாணவர்களின் நிலை என்ன, அவர்களால் இந்த மோசமான சூழலை எப்படி எதிர்கொள்ள முடியும் என்பதைப்பற்றியெல்லாம் கவலையின்றி போகிற போக்கில் பிரச்னை தன்னால் தீர்ந்துவிடும் என்று கைகட்டி நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பது தான் சிறந்த அரசுக்கான அடையாளமா என்ற கொந்தளிப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.