சதுரகிரி வெள்ளத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்: வாசன்
சென்னை: சதுரகிரிமலை வெள்ளத்தில் மூழ்கி உயிர் இழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில், அமாவாசையையொட்டி சதுரகிரி மலைக்குச் சென்றிருந்த பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேரில் 6 பேரின் சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பத்திரமாக மீட்கப் பட்டனர்.
இந்நிலையில், சதுரகிரி மலை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என த.மா.கா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் சதுரகிரி மலையில் திடீரென்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். இது மிகவும் துயரமான சம்பவம். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு போதுமான மருத்துவ வசதியும் வழங்க வேண்டும். இதுவரை மீட்கப்பட்ட நபர்கள் பத்திரமாக வீடு திரும்புவதற்கு உண்டான ஏற்பாடுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். வெள்ளத்தால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications