கிரண்பேடி பாணியில் களமிறங்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால்- கோவையில் அதிகாரிகளுடன் நாளை அதிரடி ஆலோசனை!
புதுவை ஆளுநர் கிரண்பேடி பாணியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் களமிறங்கி தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிட திட்டமிட்டுள்ளார்.
கோவை: புதுவை யூனியன் பிரதேச ஆளுநர் கிரண்பேடி பாணியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் களமிறங்கி தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிட திட்டமிட்டுள்ளார். கோவையில் நாளை மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நிர்வாகப் பணிகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்த உள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இப்பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்க உள்ளார்.
ஏற்கனவே பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தலைமறைவானார் என கூறப்பட்டது.
அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை
இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இப்பட்டமளிப்பு விழா முடிந்த கையோடு கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்துகிறார்.
திட்டப் பணிகள் குறித்து ஆராய்வு
கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு நடத்துகிறாராம். அதேபோல் அமைச்சர்கள் சிலருக்கும் ஆளுநர் பன்வாரிலால் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாராம்.
நிர்வாகத்தில் நேரடி தலையீடு
தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆளுநர்கள் இதற்கு முன்னர் இப்படியான நிர்வாக தலையீடுகளை மேற்கொண்டதில்லை. ஆனால் டெல்லியின் ஆசியுடன் தற்போது ஆளுர் பன்வாரிலால் நேரடியாக களமிறங்கியிருக்கிறாராம்.
பாஜக வாக்குகளுக்காக
கோவையை குறிவைக்க காரணமே பாஜகவை எப்படியும் வெல்ல வைக்க வேண்டும் என்பதுதானாம். கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 33,113 வாக்குகளைப் பெற்றிருந்தார். கோவையில் அரசு நிர்வாகத்தை முழுமையாக முடுக்கிவிட்டால் பாஜகவை வெல்ல வைக்க முடியும் என்கிற டெல்லியின் திட்டத்துடன்தான் இந்த அதிரடியை ஆளுநர் நாளை அரங்கேற்றுகிறாராம்.