குட்கா விற்பனைக்கு ரூ40 கோடி லஞ்சம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜுக்கு நெருக்கடி!
குட்கா விற்பனைக்கு ரூ40 கோடி லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளதால் அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சென்னை: குட்கா விற்பனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ரூ40 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக அறிக்கை தர வேண்டும் என தமிழக அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குட்கா விற்பனைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி குட்கா விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ரூ40 கோடி லஞ்சம்
குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியிருந்தனர். இந்த சோதனையில் சிக்கிய டைரி ஒன்றில் ரூ40 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது அம்பலமானது.
யார் யார்?
அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோரது பெயர்களும் இதில் அடிபட்டன. அண்மையில் வருமான வரித்துறையிடம் இது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசு பெற்றிருந்தது.
திமுக புகார்
இந்த ஆவணங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சட்டசபையில் பிரச்சனையை கிளப்பிய திமுக, ஆளுநர் வித்யாசகர் ராவிடமும் புகார் அளித்தது.
ஆளுநர் அறிக்கை
இந்நிலையில்தான் குட்கா விற்பனைக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் அறிக்கை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.