சிபிஐ வளையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்... 5கோடி 2000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கியதால் சிக்கல்
ஐடி ரெய்டின் போது ரூ.5 கோடியே 50 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கியிருப்பதால் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த 7ஆம் தேதியன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மொத்தம் ரூ.5 கோடியே 50 லட்சம், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது. இவை அனைத்தும் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் என்பதால் சிபிஐ விசாரணை வளையத்திற்கள் சிக்கியுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
இதில் விஜயபாஸ்கரின் உதவியாளர்களில் ஒருவரான திருவல்லிக் கேணியைச் சேர்ந்த நயினார் முகம்மது என்பவர் வீட்டில் சுமார் ரூ.3 கோடி ரூபாயும், எம்எல்ஏ விடுதியில் உள்ள விஜயபாஸ்கரின் அறையில் இருந்தும் எழும்பூரில் தனியார் விடுதியில் தங்கி இருந்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களிடம் இருந்தும் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.
ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்குவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆவணங்கள் சிக்கின
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும், யார் தலைமையில் பட்டுவாடா செய்ய வேண்டும் என்பது பற்றிய பட்டியல் சிக்கியதை வைத்தே இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஐடி ரெய்டின் போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 10ஆம் தேதி விஜயபாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
புதிய நோட்டுக்கள் எப்படி?
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு கோடிக் கணக்கில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதும், சம்பவ இடத்தில் பறிமுதல் செய்யப்பட்டதும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான். அதே போல விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டிலும் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
சேகர் ரெட்டி
பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சேகர் ரெட்டிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது ஊரறிந்த ரகசியம் எனவே சேகர் ரெட்டி மூலம் செல்லாத ரூபாய் நோட்டுக்களை விஜயபாஸ்கர் மாற்றியிருந்தாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
3 துறை அதிகாரிகள்
விஜயபாஸ்கர் உதவியாளர் வீடு அவரது அறையில் புதிய ரூபாய் நோட்டுக்கள் வந்தது எப்படி என்பது பற்றி வருமான வரித் துறை மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய 3 அமைப்புகளையும் இந்த விசாரணையில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக 3 துறை உயரதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இன்று மீண்டும் ஆஜர்
விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கடந்த 10ஆம் தேதி பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று விஜயபாஸ்கர் மீண்டும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில் 2000 நோட்டுக்கள் பற்றிய கேள்விகள்தான் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஐ விசாரணை
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்த புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை யாராவது பதுக்கி வைத்திருந்தால், அதுபற்றி விசாரணை நடத்த சிபிஐக்கு சிறப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. எனவே விரைவில் சிபிஐ அதிகாரிகள் தங்களின் விசாரணையை தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
விரைவில் விசாரணை
கடந்த 12ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ரூ.89 கோடி பணப் பட்டுவாடா தகவல்களை வருமான வரித் துறையினர் கொடுத்தனர். அதன் பேரில் அமலாக்கத்துறை விரைவில் விசாரணையை தொடங்க உள்ளது. அதுபோல புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒருபக்கம் வருமான வரித்துறை, இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை, சிபிஐ என மும்முனைத் தாக்குதலில் சிக்கியுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.