ஜார்ஜ், ராஜேந்திரன் கண்ணியம் பற்றிப் பேசுவதா.. கொதிக்கும் காவலர் ஒற்றுமை இயக்கம்!
பான் மசாலா, குட்கா விற்பனையை அனுமதிக்க லஞ்சம் வாங்கிய காவல் உயர் அதிகாரிகளுக்கு எதிராக காவலர் ஒற்றுமை இயக்கம் கொதித்தெழுந்துள்ளது.
சென்னை : அண்மையில் போலீசார் 8 மணி நேரத்தையும் கட்ந்து உழைப்பதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பரபரப்பு கிளப்பிய காவலர் ஒற்றுமை இயக்கப் பதிவு, தற்போது லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோரை கழுவி கழுவி ஊற்றியுள்ளனர்.
சட்டவிரோத குட்கா தயாரிப்பில் மாமூல் வாங்கிய பெரும் தலைகள், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் இரண்டு மாநகர ஆணையர்கள் ஜார்ஜ் மற்றும் டிகே.ராஜேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற பிரச்னை பத்திரிக்கைகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவலர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளின் கண்ணியம் இது தான் என்று திட்டித் தீர்த்துள்ளது காவலர் ஒற்றுமை இயக்கம்.
காவல் துறையில் பணியாற்றுபவர்களின் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக முகநூலில் தொடங்கப்பட்ட காவலர் ஒற்றமைக் குழுவில், இந்த கணக்கில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் டிஜிபி ராஜேந்திரன், மற்றும் ஜார்ஜ் மீதான புகார் குறித்து வெளியிடப்பட்டள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகுதியில்லாத அதிகாரிகள்
சுயநல ஆணவ அதிகார வர்க்கமே இனி கட்டுப்பாடை பற்றியும் கண்ணியத்தை பற்றியும் பேச உமக்கு இனி தகுதியில்லை. ஜீலை 6ம் தேதி ஒன்று கூடுகிறோம். மண்டியிடாத மானம்.வீழ்ந்து விடாத வீரம்.முடிந்தால் தடுத்து கொள்ளவும்.
சில அதிகாரிகளை பற்றிய விவரங்கள், பெற்ற லஞ்சங்கள், சோ்த்த பினாமி சொத்துக்களை புள்ளி விவரத்துடன் தயார் செய்து வருகிறோம். விரைவில் பம்பா் பரிசாக அறிவிக்கப்படும்.
சந்தி சிரிக்கும் கண்ணியம்
உத்தம புத்திரா்கள் என தம்மை வெளிகாட்டி வந்த டிஜிபி அவர்களே. தமிழன் என்ற உணா்வை வெளிபடுத்த முடியாமல் எமது இனத்தை எங்களை வைத்தே விரட்டியடிக்க வைத்து எங்களின் தொப்புள் கொடி உறவை அறுத்த அண்டை மாநிலத்தார் ஜார்ஜ் அவர்களே..காவலா் சங்கம் அமைக்க முற்படும் காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், 50காவலா்களை கண்காணிக்க உத்தரவிட்டவரே.
யார் நடவடிக்கை எடுப்பது?
மெயில் மூலமாக குறைகளை கூற சொல்லி தற்போது பெயில் எடுப்பது எப்படி என சிந்தித்து கொண்டிருப்பவரே, கட்டுப்பாட்டை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என கொக்கரித்த கடமை தவறாத,போதை பொருளுக்கு ஆதரவளித்து கோடி கணக்கில் லஞ்சம் பெற்ற கண்ணியமிக்கவரே,கடமை கண்ணியம் கட்டுப்பாடு என அறிவிப்பு வெளியிட்டு இன்றைய தினம் டிஜிபி ரூ.1.4கோடியும், ஜார்ஜ் அவர்கள் ரூ.75லட்சமும் பெற்று கட்டுப்பாடு தவறியவர்களே தற்சமயம் யார் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பது?
யார் தண்டிப்பது?
காவலா்கள் 100ரூபாய் லஞ்சம் பெற்றாலே பணியிடை நீக்கம், பணி மாற்றம் என உத்தரவு பிறப்பீரே இன்று உங்களை யார் தண்டிப்பது? ஒரு வேளை இதையும் கட்டுக்கதை எனவும்,ஆதாரம் வெளியிட்டவரை சமூக விரோதி எனவும் அறிவிப்பீரோ?அதிகாரமும் பதவியும் தன் கைவசம் இருப்பதால் பல கடைநிலை காவலா்களை அடிமையாக வைத்திருந்தீா்களே!!
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிருமா?
தாங்கள் செய்யும் மிகப்பெரும் ஊழலை மறந்து தவறை மறந்து சிறு தவறு செய்யும் கடைநிலை காவலரை வதைத்தவா்களின் பதவி பறிக்கப்பட வேண்டும். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.மக்களே காவலா் தவறு செய்தாலோ, 100ரூபாய் லஞ்சம் பெற்றாலோ வசை பாடி நடவடிக்கை எடுக்க கூறுவீரே இன்று கோடிகணக்கில் பெற்றவா்களை என்ன செய்வீர்கள்? உயர் அதிகாரி என்பதால் ஒதுங்கிவிடுவீரா அல்லது அனைவரும் சமம் என்பதை நிருபணம் செய்வீர்களா?லஞ்சம் தவிர். நெஞ்சம் நிமிர்.., என்று அந்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.