என்னப்பா அங்க சத்தம்.. ஒன்னுமில்லப்பா, சத்தியமூர்த்தி பவனில் பூட்டை உடைச்சு விளையாடுறாங்க!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். தலைவரே இல்லாத சத்தியமூர்த்திபவனில் இளைஞர் காங்கிரஸ் பிரிவுக்கு தனி அறை கேட்டு, மாநில தலைவர் விஜய இளஞ்செழியன் தலைமையில் ஒரு அறையின் பூட்டை உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலக்குறைவால் சோனியாகாந்தி டெல்லியில் வீட்டில் ஓய்வெடுத்துவரும் நிலையில் அவரது உடல்நலக்குறைவு விவகாரம் கட்சித் தலைமை மாற்றம் குறித்த எண்ணம் காங்கிரஸ் கட்சிக்குள் வலுத்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சத்திய மூர்த்தி பவனில் குழப்பம் நீடித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார். யாரை தலைவராக நியமிக்கப்போகிறார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். யாரை தலைவராக நியமித்தாலும் அவருடன் இணைந்து செயல்படுவோம் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. மாநில பொதுச் செயலாளர்களாக பதவி வகிக்கும் செல்வம், சிரஞ்சீவி, ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொறுப்புக் குழு அமைத்து இயங்கி வருகின்றனர்.
சத்தியமூர்த்திபவனில் தரைதளத்தில் ஊடக பிரிவு தலைவராக இருக்கும் கோபண்ணாவின் அறை உள்ளது. தற்போது அந்த அறை பூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய இளஞ்செழியன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நேற்று சத்தியமூர்த்திபவனுக்கு வந்தனர். அவர்கள் சத்தியமூர்த்திபவன் மேலாளரிடம், இளைஞர் காங்கிரஸ் பிரிவுக்கு ஒரு அறை வேண்டும். கோபண்ணா பயன்படுத்தும் அறைக்கான சாவியை தருமாறு கேட்டுள்ளனர். அவர் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால் அறையின் பூட்டை உடைக்கப் போவதாக கூறி சுத்தியலை எடுத்து வந்தாராம் இளஞ்செழியன் இதுகுறித்த தகவல் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சத்தியமூர்த்திபவன் வந்த இளங்கோவன், அங்கிருந்த விஜய இளஞ்செழியனுடன் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சத்தியமூர்த்திபவனில் அறையின் பூட்டை உடைக்க முயற்சித்ததை கண்டித்தார். இதன்பின்னர் விஜய இளஞ்செழியன் ஆதரவாளர்களுக்கும், இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது.
உடனடியாக மூத்த தலைவர்கள் தலையிட்டு, தலைவரை நியமிக்கும் வரை யாரும் எந்த அறையும் வழங்கப்படமாட்டாது என்று சமாதானம் செய்தனர். இதையடுத்து, இருதரப்பும் கலைந்து சென்றனர்.
நடந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபன்னா, சத்தியமூர்த்தி பவனில் உள்ள தனது அறையின் பூட்டை உடைக்க முயன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய இளஞ்செழியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சின்னாரெட்டிக்கு புகார் அனுப்பியுள்ளார்.
விடுப்பா விடுப்பா... சத்தியமூர்த்திபவன்னா கோஷ்டி இருக்கிறதும்... கோஷ்டிக்குள்ள சண்டை வர்றது சகஜம்தானே!....