ஊதிய உயர்வு விவகாரம்: மின்வாரிய ஊழியர்கள் நாளை முதல் ஸ்டிரைக்!
ஊதிய உயர்வு விவகாரத்தில் மின்வாரிய ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
சென்னை: ஊதிய உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணாததைக் கண்டித்து மின்சார வாரிய ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் மின்விநியோக பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மின்வாரிய ஊழியர்களுக்கு 2015-ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நிர்வாகத்துடன் தொழிற்சங்கத்தினர் பல முறை பேச்சுவார்த்தை நடதிதினர்.
ஆனால் இப்பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் தொழிற்சங்க நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து திட்டமிட்டபடி நாளை வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.
வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் மின்விநியோக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. அண்மையில் போக்குவரத்து ஊழியர்கள் ஒருவார காலம் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியிருந்தனர். தற்போது மின்வாரிய ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.