புகையிலை பொருள்களுடன் பீடி- சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்த போலீஸார்... நெல்லை வியாபாரிகள் மறியல்
புகையிலை பொருள்களுடன் பீடி, சிகரெட் உள்ளிட்டவற்றையும் சேர்த்து பறிமுதல் செய்ததாக போலீஸாரை கண்டித்து நெல்லை வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை: ஸ்ரீவைகுண்டத்தில் பீடி, சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததாக போலீஸாரை கண்டித்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதியில் இருக்கும் கடைகளில் கடந்த சில நாட்களாக செயல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதில் போலீஸார் சிலர் கடைகளில் விற்கப்பட்ட புகையிலை பொருள்களோடு பீடி, சிகரெட் பாக்கெட்டுகளையும் சேர்த்து பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வியாபாரிகள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே போலீஸார் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்துமாறு கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த செயலால் மேலும் கொதித்த வியாபாரிகள் திடீரென கடையை அடைத்து விட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து புகார் கொடுக்க காவல் நிலையம் செல்ல முயன்றனர். தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் விரைந்து வந்து வியாபாரிகளை சமாதானப்படுத்தினார்.
அப்போது அவர் கூறுகையில் வழிபாட்டு தலம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனையை தடுக்கும் பொருட்டே சோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார். இன்ஸ்பெக்டரின் சமாதான பேச்சு1வார்த்தையை தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்று கடையை மீண்டும் திறந்தனர்.