பாலியல் குற்றவழக்குகளில் தண்டனைக்குரிய வயது குறைக்கப்படும்: மேனகா காந்தி
சென்னை: பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக இளஞ்சிறார் வயது வரம்பை 18-லிருந்து 16 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் 6வது இந்து ஆன்மிக சேவை கண்காட்சியை, மத்திய குழந்தைகள் நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்து ஆன்மிக கண்காட்சியில் கலந்து கொண்டு அரங்குகளை பார்வையிட்டதுடன், அதனுடைய செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விழா குழுவினர் டெல்லியிலும் இதுபோன்ற கண்காட்சி நடத்த முன்வரவேண்டும் என்றார்.
பெண்களின் பாதுகாப்பை கருதி, பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து பெண்களுக்கு என தனியாக பொதுகழிப்பிடங்கள் கட்டுவதற்கு மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.
கடுமையான தண்டனை
நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் சிறுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்று இளஞ்சிறார் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.
பாலியல் குற்றச் செயல்கள்
குறிப்பாக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை சிறுவர்களாக கருதி, அவர்கள் தவறு செய்தாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை போல் இல்லாமல், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு, வரும் காலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடாதவாறு திருந்தி வாழ்வதற்கான வழிமுறைகள் கற்றுத்தரப்படுகிறது. ஆனால், தற்போது 50 சதவீதம் பாலியல் வன்கொடுமைகளில் 16 வயது உள்ளவர்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர்.
16 வயதாகக் குறைப்பு
சிறுவர்களாக இருப்பதால் தண்டனையில் இருந்து எளிதாக தப்பிவிடலாம், என்று தெரிந்தே இவர்கள் தவறான வழிகளில் ஈடுபடுகின்றனர். இதனை தடுப்பதற்காக சிறார் நீதி சட்டத்தின்படி சிறுவர்களுக்கான வயது 18 என்பதை 16 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டத்திருத்தம்
இதற்காக வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சட்டதிருத்தம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளோம். பெண்களை பலப்படுத்துவதற்காக முறையான கல்வி மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்கு போலீசாரும் தனிகவனம் செலுத்த வேண்டும்.
வளர்ப்பு பெற்றோர் திட்டம்
வீடுகளில் வன்கொடுமையை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வீடற்ற அல்லது புறக்கணிக்கப்பட்ட குழுந்தைகள், பெற்றோர்களை இழந்த குழந்தைகள், பெற்றோர்கள் சிறைக்கு சென்றுவிட்ட நிலையில் ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு தருவதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் இருப்பது போன்று வளர்ப்பு பெற்றோர் திட்டம் நம் நாட்டிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
அரசே தத்து எடுக்கும்
இந்த திட்டத்தின்படி ஆதரவற்ற குழந்தைகளை அரசு தத்து எடுத்து, வீடுகளில் வளர்க்க முடிவு செய்துள்ளது. வீடுகளில் வளர்ப்பு பெற்றோர் மூலம் வளர்த்து சமுதாயத்தில் சிறந்த குடிமகனாக மாற்றப்பட உள்ளனர். இதற்கான செலவுகளை அரசு ஏற்க உள்ளது. இதுபற்றியும் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனால் தனியார் விடுதிகளில் ஏற்படும் தவறுகளும் முடிவுக்கு கொண்டுவரப்படும்" என்றார்.