சாலையில் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்ட விவசாயிகள் மீது தாக்குதல்: 3 பேர் கைது
திருப்பூர்: சாலையில் அமர்ந்து மது குடித்ததைத் தட்டிக் கேட்ட விவசாயிகளை கற்களால் தாக்கியதாக காங்கேயம் அருகே கரித்தொட்டி பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை ஊழியர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள அவிநாசிபாளையம் புதூரைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ். இவர் கடந்த ஞாயிறன்று காங்கேயத்திலிருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கரித்தொட்டி பவுடர் தயாரிக்கும் தொழிற் சாலை அருகே, மண் சாலையில் அமர்ந்து அந்த ஆலையைச் சேர்ந்த சிலர் மது அருந்திக்கொண்டு இருந்ததை செல்வராஜ் கண்டுள்ளார்.
இவ்வாறு சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக மது அருந்தக் கூடாது என அவர்களை செல்வராஜ் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனது ஊருக்குள் சென்ற செல்வராஜ், தகராறு தொடர்பாக விசாரிக்க தனது உறவினரான நல்லசாமியை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் மது அருந்தியவர்களுக்கும், செல்வராஜ் மற்றும் நல்லசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மது அருந்தியவர்கள் செல்வராஜையும், நல்லசாமியையும் கற்களால் தாக்கியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த செல்வாராஜ், நல்லசாமி இருவரும் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் குறித்து காங்கயம் காவல் உதவி ஆய்வாளர் மாலா வழக்குப் பதிவு செய்து, தனியார் ஆலை ஊழியர்களான ஆகாஷ் (22), அன்னராஜ் (22), துரைபாண்டியன் (26)ஆகியோரைக் கைது செய்துள்ளார்.