ஸ்டாலினின் விரக்திப் பேச்சுக்கு என்ன காரணம் தெரியுமா.. தினகரன் பரபர விளக்கம்!
அமித்ஷா வராத கோபம்தான் ஸ்டாலினின் பேச்சுக்கு காரணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அஞ்சலி கூட்டத்துக்கு அமித்ஷா வராத கோபத்தில்தான், ஸ்டாலின் இப்படி ஆவேசமாக பேசுகிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமமுக துணை பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நேற்று புதிதாக பொறுப்பேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைத்து கருத்துக்களை தெரிவித்தார். டிடிவி தினகரன் பேசும்போது ஸ்டாலின் குறித்து கூறியதாவது:

ஏற்கனவே அறிமுகம்தான்
ஒரு கட்சியில் ஒரு தலைவர் இறந்தபிறகு தான் மற்றொருவர் தலைவராக பதவி ஏற்பார். அதன்படிதான் ஸ்டாலினும் பதவி ஏற்று உள்ளார். கருணாநிதி உயிருடன் இருந்தபோதே அடுத்த கட்ட தலைவர் ஸ்டாலின்தான் என அறிமுகம் செய்யப்பட்டது.

திணிக்கப்பட்ட பதவியா?
ஆனாலும், ஸ்டாலின் தன் சொந்த உழைப்பால்தான் இந்த பதவிக்கு வந்தாரா, அல்லது கருணாநிதியின் மகன் என்பதால் பதவிக்கு வந்தாரா, அல்லது திணிக்கப்பட்டு தலைவர் பதவிக்கு வந்தாரா, இல்லை தானாக வந்தாரா என்பது எல்லாம் இனி வரும் அரசியல் மற்றும் தேர்தல் கள செயல்பாடுகளில்தான் தெரியவரும்.

தலைமை பண்புக்கு அழகா?
அண்ணா சமாதியில்தான் இடம் வேண்டும் என கருணாநிதி ஆசைப்பட்டார் என்பதற்காக முதல்வரை சந்தித்தாக கூறுகிறார். அப்படி சந்தித்து இடம் கேட்கும்போது, முதல்வரின் கையை பிடித்து கெஞ்சினேன் என்றெல்லாம் கூறுவது ஒரு தலைமை பண்புக்கு அழகா? கருணாநிதிக்கு அண்ணா சமாதியில் இடம் கிடைக்க, முதலிலேயே நீதிமன்றம் போயிருக்கலாமே?

விரக்தியில் ஸ்டாலின்
மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி வைக்க பார்த்தனர். ஆனால் அந்த கூட்டணி அமையவில்லை. அதேபோல, கருணாநிதி புகழ் அஞ்சலிக்கு, அமித்ஷா வருவதாக முதலில் சொல்லிவிட்டு இப்போது, அவர் வரமாட்டார், அவருக்கு பதில் வேறு ஒருத்தரை அனுப்பி வைக்கிறார்கள். நினைத்தது எதுவுமே நடக்காத வேதனையில், ஸ்டாலின் மிகவும் கோபமடைந்துவிட்டார். அதனால் தமிழகத்தில் காவிமயம் ஆவதை விட மாட்டோம் என்று விரக்தியில் பேசுகிறார். இதுவும் தலைமைக்கான பண்பாக தெரியவில்லை.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.












Click it and Unblock the Notifications