வாக்காளர்களுக்கு பணம் தராமல் 'கடன்' வைத்தேனா? சர்ச்சைக்கு டிடிவி தினகரன் விளக்கம்
கடன் சொல்லி வாக்காளர்களிடம் ஓட்டு வாங்க வேண்டிய நிலை இல்லை என்று டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை : வாக்காளர்களிடம் ஓட்டு போட்ட பின்பு பணம் தருவதாக கடன் சொல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு நேரம் மாலை ஐந்து மணிக்கு முடிவடைந்தும் பல வாக்காளர்கள் வரிசையில் ஏழு மணி வரை நின்று வாக்களித்துவிட்டு சென்றனர். வாக்களிக்கவில்லை என்றால் கொடுத்த பணத்தை திரும்ப கேட்பார்கள் என்கிற அச்சத்திலேயே வாக்களித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
காலை வாக்குப்பதிவின் போதே பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன், தினகரன் அணியினர் 20 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு ஓட்டு போட்டுவிட்டு வந்து சீரியல் எண் சொல்லி பணம் வாங்கிக்கொள்ள பலருக்கு டோக்கன் அளிக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து இன்று மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் டி.டி.வி தினகரன் பதிலளித்தார். அப்போது, டோக்கன் கொடுத்து, தொகுதி மக்களிடம் கடன் சொல்லி ஓட்டு வாங்க வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை.
என்னை நம்பி இருக்கும் மக்களிடம் நான் ஏன் கடன் சொல்ல வேண்டும். ஆனால், இப்படி யாராவது ஓட்டு கேட்பார்களா? இதை எல்லாம் ஒரு குற்றச்சாட்டாக வைப்பதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும்,விரைவில் மக்கள் விரோத ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற மக்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள். அடக்குமுறையை கையாளும் அரசு விரைவில் மண்ணைக் கவ்வும். அது வாக்கு எண்ணிக்கையின் போது அனைவருக்கும் தெரிய வரும் என்றும் தினகரன் குறிப்பிட்டு உள்ளார்.