ஆஹா, திமுக கோபப்படுதே.. இனி எத்தனை 'தலை' உருளப்போகுதோ
ஆர்.கே.நகரில் தேர்தல் பணியாற்றத் தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக முடிவு செய்துள்ளது கட்சியினரிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Recommended Video
சென்னை: அரசியல் என்பது ஒரு கலை, அந்த கலை அனைவரின் கைகளிலும் போய் சேர்ந்து விடாது. நன்மை, தீமை, துரோகம், இரக்கம், நடிப்பு, சுதாரிப்பு, பேராசை, முட்டாள்தனம், ராஜதந்திரம், சுறுசுறுப்பு, சமயோசித புத்தி, சமாளிக்கும் திறன், உத்வேகம், மக்கள் அன்பு உள்ளிட்ட அனைத்தும் இருப்பவர்களுக்கும் அனுபவித்தவர்களுக்கும் மட்டும் தான் அரசியல் கலை கைக்கு வந்து சேரும்.
இந்த கலையில் தேர்ந்தவர்கள் வெற்றியையும், தோல்வியையும் சரி சமமாக பார்க்கும் மனப்பக்குவத்தை அடைந்து விடுகின்றனர். இதுவே அவர்களுக்கு தொடர் வெற்றிகளை குவிக்கும் ஆற்றலையும் தந்து விடுகிறது.
இந்த ஆற்றலை பெற முயற்சி செய்யாதவர்களுக்கு தொடர்ந்து தோல்விகளே கிடைக்கின்றன. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், பல கட்சி தலைவர்களையும், பிரமுகர்களையும் சுயபரிசோதனை செய்ய வைத்து விட்டது ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்.
நடவடிக்கை பாயும்
இந்த தேர்தலில் ஆண்டாண்டுகாலமாக ஆண்ட கட்சிகளும், இன மற்றும் மத அடையாளத்தை முன்னிறுதிய கட்சிகளும் மண்ணை கவ்வியது பலரையும் சிந்திக்க வைத்து விட்டது. தேர்தல் தோல்வி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்திய திமுக, ஆர்.கே.நகரில் களப்பணி செய்யாத திமுக பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
தக்க வைக்க வேண்டுமே
இன்றைய சூழ்நிலையில், இருக்கும் கட்சிக்காரர்களை தக்க வைத்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம், அதை விட்டு நடவடிக்கை, தண்டனை என்று பாய்ந்தால் "இருப்பவனுக்கு ஒரு கட்சி இல்லாதவனுக்கு பல கட்சி.." என்று திமுக தொண்டர்கள் வேறு கட்சிக்கு தாவிடும் நிலைமையும் உருவாகும் என்கிறார்கள் இந்த அறிவிப்பை பார்த்த சில அரசியல் பார்வையாளர்கள்.
கட்சி அடையாளம்
தற்போதைய அரசியலில் தலைவர்களுக்கு பஞ்சமில்லை, கட்சி தொண்டர்கள் தான் எண்ணிக்கையில் வெகுவாக குறைந்து வருகின்றனர். அனைத்து கட்சி தலைமையும் தங்களிடம் 4கோடி தொண்டர்கள், 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக புருடா விட்டாலும் அவர்கள் கட்சியில் இருப்பது எண்ணமோ சில ஆயிரங்கள் தான். தலைமுறை மாறுகிறது, கட்சித் தொண்டர்களின் வாரிசுகள் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். அதில் பெரும்பான்மையான வாரிசுகளுக்கு இந்த கட்சி அடையாளம் ஒருவிதமான அசௌகரியத்தை தான் கொடுக்கிறது.
துரைமுருகன் கணிப்பு
முன்பே கூறியிருந்தது போல அரசியல் கலையில் எல்லோரும் தேர்ந்து விட முடியாது.... தேர்ந்தவர்கள் எல்லாம் 90 வயதுக்கும் மேல் உழைத்துக்கொண்டும் இருக்க முடியாது... இது தான் காலத்தின் கணக்கு. இந்த நிலையில்தான் ஆர்கேநகர் தேர்தலில் வேலை செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பவோதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், என்ன மாதிரி எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. திமுக ஓட்டுக்களை பணம் சாப்பிட்டுவிட்டது என்று மூத்த தலைவர் துரைமுருகன் கூறியிருந்த நிலையில் ஆக்ஷன் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது திமுக என்பது குறிப்பிடத்தக்கது.